மக்களின் அன்றாட தேவைகளை தீர்க்க முடியாமல் திண்டாடும் தமிழக அரசு - வானதி சீனிவாசன்
வேலூர்: தமிழக அரசு மக்களின் அன்றாட தேவைகளை தீர்க்க முடியாமல் தமிழக அரசு திண்டாடி வருகின்றது என்று பாஜகவின் மாநில துணைத்தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
குடியாத்தம் காந்தி நகரில் பா.ஜ.க ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பா.ஜ.க மாநில துணைத் தலைவரும், வேலூர் கோட்ட பொறுப்பாளருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் பாஜகவில் புதிய உறுப்பினர்களாக 60 லட்சம் பேரை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதற்காக ஒன்றியங்கள், நகரங்கள், கிராமங்கள் தோறும் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு தீவிரமாக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகிறது. தற்போதுவரை 4 லட்சத்து 50 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு மக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்க்க முடிவு எடுக்க முடியாமல் திணறி வருகிறது. குறிப்பாக போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினையை கையாண்ட விதத்தில் அது தெரிகிறது. மக்கள் அமைதியான முறையில், மனதில் கொதிப்போடு இருக்கின்றனர்.
அமைச்சர்கள் மிக தீவிரமாக மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும். நீண்ட திட்டங்கள் அல்லது பிரச்சினைகளுக்கு தெளிவான பார்வையில் அமைச்சர்களின் செயல்பாடுகள் இல்லை.
தமிழ்நாட்டில் திட்டங்களை தொடங்க வெளிநாட்டு முதலீடுகளை பெற தமிழக அரசு திட்டமிடுவதாக கூறுகின்றனர். ஆனால் அதற்கான எந்த வேலைகளும் நடைபெறவில்லை" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications