காங்கிரஸ் உள்விவகாரத்தை விமர்சிக்க வாசன் யார்?: இளங்கோவன் ஆவேசம்
சென்னை: காங்கிரஸ் கட்சியின் உள் விவகாரத்தை பற்றி விமர்சனம் செய்ய ஜி.கே.வாசன் யார்? என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் வக்கீல் அணி நிர்வாகிகள் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமை தாங்கிய இக்கூட்டத்தில், மூத்த வக்கீல் காந்தி உள்பட தமிழகம் முழுவதிலும் இருந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட வக்கீல்கள், வக்கீல் அணியை சேர்ந்த தங்களுக்கு உயர் பதவிகளை கட்சி வழங்கி, உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். அப்போது அவர் கூறியதாவது :-
நீதிபதி பதவிக்கான காலி பணியிடங்களை விரைவாக நிரப்புவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு தொடங்க வேண்டும். மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சட்டக்கல்லூரியை மாற்றக்கூடாது. அந்த கல்லூரியின் கட்டிடங்களை புதுப்பிக்க வேண்டும்.
தமிழக அரசு தனியாரிடம் இருந்து மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு ரூ.12.19 என்ற விலையில் இருந்து ரூ.15 வரை வாங்குகிறார்கள். இதனால் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி நஷ்டம் வருகிறது. எனவே குறைந்த விலையில் மின்சாரத்தை வாங்குவதற்கான முயற்சியில் தமிழக அரசு ஈடுபட வேண்டும்.
கோவையில் உள்ள வனவியல் மாணவர்கள் வனசரகர் வேலைவாய்ப்பில் தங்களுக்கு எதிரான அரசாணையை திரும்ப பெற வேண்டும் என்று போராடி வருகிறார்கள். எனவே அவர்கள் முன்னுரிமை சதவீதத்தை அதிகரிக்க வேண்டும். இந்தியாவுக்கு விரைவில் வர உள்ள இலங்கை அதிபர் சிறிசேனாவிடம் நம்முடைய பிரதமர், இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை அழுத்தமாக பதிவு செய்ய வேண்டும். அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளைக்கு வேறு மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டது குறித்து ஜி.கே.வாசன் கருத்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் உள் விவகாரத்தில் தலையிட அவர் யார்?. இது போன்ற விஷங்களில் அவர் தலையிடாமல் இருப்பது நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் எம்.எல்.ஏ. யசோதா தலைமையில் மகளிர் அணி ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், மார்ச் 8-ந் தேதி சத்தியமூர்த்தி பவனில் மகளிர் தினம் கொண்டாடுவது குறித்தும், அந்த நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர்களை அழைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications