ஈ.வி.கே.எஸ்.-ன் அடாவடிப் பேச்சு... ராகுலைச் சந்தித்து சிதம்பரம் புகார்!
சென்னை: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை, அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் சந்தித்துப் பேசினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கடந்த வெள்ளியன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அப்போது, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா மற்றும் துணைத்தலைவர் ராகுல் மீது அவர் அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்திருந்தார்.
ஜெயந்தி நடராஜனின் விலகல் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ஜெயந்தி நடராஜனின் தாத்தாவும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான பக்தவத்சலம் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்தார். மேலும், ஜெயந்தி கட்சியை விட்டு விலகியதற்கு நன்றி தெரிவித்த இளங்கோவன், இதைப்போலவே முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரமும், அவரது மகனும் கட்சியை விட்டு வெளியேறினால் நலமாக அமையும் என மறைமுகமாகத் தாக்கி பேசினார்.
இளங்கோவனின் இந்தப் பேச்சு காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இளங்கோவனை, சோனியா கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இளங்கோவனின் கருத்து தொடர்பாக புகார் தெரிவிப்பதற்காக டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார் சிதம்பரம். சுமார் அரைமணி நேரம் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, தமது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கும், இளங்கோவனுக்கும் இடையிலான கருத்து மோதல்கள் குறித்து சிதம்பரம் பேசியதாகத் தெரிகிறது.
மேலும், தமிழக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான பக்தவத்சலம் குறித்து இளங்கோவன் தரக்குறைவாக பேசியது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியதாகவும் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.