7 தமிழர் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறைக்கு அறிக்கை அனுப்பவில்லை-ஆளுநர் மாளிகை மறுப்பு
Recommended Video
சென்னை: 7 தமிழர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை பரிந்துரை அனுப்பியதை மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பவில்லை என்று ஆளுநர் மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது.
பேரறிவாளன், நளினி உட்பட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள 7 பேரையும் சட்டப் பிரிவு 161ஐ கீழ் விடுதலை செய்வதற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழக அமைச்சரவை முடிவு செய்து அந்த பரிந்துரையை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பியதாக அறிவித்தது.
இந்த பரிந்துரையை ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக நேற்றுமுன்தினம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் இன்று ஆளுநர் மாளிகை இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சில மீடியாக்களில், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 பேர் விடுதலை தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தமிழக ஆளுநர் அறிக்கை அனுப்பி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்த யூகத்தின் அடிப்படையில் சில செய்தி சேனல்கள் விவாத நிகழ்ச்சிகளையும் நடத்தின.
ஆனால், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அப்படி எந்த அறிக்கையையும் அனுப்பவில்லை. இந்த வழக்கு மிகவும் சிக்கலானது. சட்டம், நிர்வாகம் மற்றும் அரசியல் சாசன விவகாரங்கள் தொடர்பாக ஆலோசோிக்கப்பட தேவையுள்ள வழக்கு இது.
மாநில அரசிடமிருந்து செப்டம்பர் 14ஆம் தேதி தான் வழக்கு தொடர்பான, தீர்ப்பு விவரம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் ஆளுநர் மாளிகைக்கு வந்துள்ளன.
இந்த ஆவணங்களை பரிசீலிக்கும் பணிகள் நடக்கின்றன. தேவைப்பட்டால், தேவைப்படும் ஆலோசனைகள் பெறப்படும். முடிவு என்பது அரசியல் சாசனத்திற்கு உட்பட்டதாக நியாயமானதாக இருக்கும். இவ்வாறு ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.