போரூர் கட்டிட விபத்து: கவர்னர் ரோசய்யா அதிர்ச்சி- காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்தனை
சென்னை: போரூர் கட்டிடம் இடிந்து விழுந்து தொழிலாளர்கள் பலியான சம்பவம் தொடர்பாக தமிழக கவர்னர் ரோசய்யா அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை சென்னையில் திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில், சென்னையை அடுத்த போரூர் அருகே மவுலிவாக்கத்தில் கட்டுமானம் நடந்து கொண்டிருந்த 11 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் துரிதகதியில் நடந்து வருகிறது. இந்த கட்டிட விபத்து தொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், போரூர் கட்டிட விபத்திற்கு தமிழக கவர்னர் ரோசைய்யா வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
போரூர் மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் கட்டுமானப் பணியாளர்கள் பலர் உயிரிழந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். வெளி மாநிலங்களில் இருந்து இந்த கட்டிடப் பணிக்காக வந்த பணியாளர்களும் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதை கேள்விப்பட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். இந்த சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடையும்படி விருப்பம் தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.