பற்களை பிடுங்கிய பல்வீர் சிங்.. தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் பரபர அறிக்கை.. காரணம் இதுதான்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணை என்ற பெயரில் ஆண்களின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்த குற்றச்சாட்டில் ஏஎஸ்பி பல்வீர் சிங் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில் தற்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் பல்வீர் சிங் விவகாரத்தில் தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் பரபரப்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஏஎஸ்பியாக இருந்தவர் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங். ஹரியானாவை சேர்ந்த இவர் மும்பை ஐஐடியில் என்ஜினீயரிங் முடித்தார். கடந்த 2020ல் பணிக்கு சேர்ந்த இவர் அம்பாசமுத்திரத்தில் கடந்த ஆண்டு முதல் பணி செய்து வந்தார்.
இந்நிலையில் தான் அம்பாசமுத்திரம் பகுதியில் சிறுசிறு குற்றங்களில் ஈடுபடும் நபர்களை அவர் துன்புறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது விசாரணை என்ற பெயரில் அவர்களை சித்ரவதை செய்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர்.

பற்களை பிடுங்கிய பல்வீர் சிங்
குறிப்பாக பல்வீர் சிங் 10க்கும் அதிகமானவர்களின் பற்களை பிடுங்கி கொடுமை செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட பலரும் பல்வீர் சிங்கிற்கு எதிராக குரல் கொடுக்க துவங்கினர். வீடியோ மூலம் அவர் மீது குற்றம்சாட்டினர். இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வீர் சிங்கிற்கு எதிராக தமிழகம் முழுவதும் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

பணியில் இருந்து சஸ்பெண்ட்
இதையடுத்து உடனடியாக விசாரணை குழு அமைக்கப்பட்டது. மேலும் பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அதன் பிறகு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் சம்பவம் குறித்து விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார். இந்த விவகாரத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையமும் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கி உள்ளது.

ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம்
இந்நிலையில் தான் பல்வீர் சிங் விவகாரத்தில் தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் இன்று பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த சங்கத்தின் தலைவரும் டிஜபிபியுமான அபாஸ் குமார் பெயரில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பல்வீர் சிங்கிற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அறிக்கையில் இருப்பது என்ன?
பல்வீர் சிங் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் மாநில மனித உரிமைகள் ஆணையமும் விசாரணையை துவங்கி உள்ளது. 6 வாரத்துக்குள் அறிக்கை கேட்டுள்ளது. இந்நிலையில் தான் பல்வேறு தளங்களில் இயங்கும் மீடியாக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வகையில் செய்திகள் வெளியிட்டு வருகிறது. மேலும் ஆதாரங்கள், சாட்சிகள் என்ற அடிப்படையில் சமூக ஊடகங்களில் சுயநலமான பிரசாரங்கள் செய்யப்படுகிறது. இத்தகைய செயல்கள் விசாரணையை பாதிக்கலாம். அதோடு இந்த விஷயத்தில் பாராபட்சமின்றி விசாரணை நடத்தப்பட வேண்டும். இதனால் விசாரணைக்கு பாதிப்புக்கு ஏற்படாத வகையில் ஊடகங்களில் செயல்பட கேட்டு கொள்கிறேன்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications