தமிழகத்தில் "புதிய வாக்காளர்கள்" அலை மோதவும் இல்லை...மோடி அலையும் இல்லை...!!
சென்னை: தமிழகத்தில் மோடி அலை வீசுகிறது.. இளம் தலைமுறை வாக்காளர்கள் வரிந்துகட்டி கொண்டு வாக்களிக்கப் போகிறார்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால் தமிழகத்தில் எப்போதும்போல் வழக்கமான வாக்குகளே பதிவாகி உள்ளன.
தமிழகத்தில் கடந்த 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 72.83% வாக்குகள் பதிவாகி இருந்தன. தற்போதைய தேர்தலில் 72.98% வாக்குகள் பதிவாகியுள்ளன. இது மிகப் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை.
ஆனால் தேர்தல் பிரசாரத்தின் போது தமிழகத்தில் புதிய இளம்தலைமுறை வாக்காளர்கள் அலை அலையாக எழுந்து வந்து வாக்களிப்பார்கள்.. பாஜக கூட்டணிக்கு ஓட்டுப் போடும் அளவுக்கு மோடி அலை வீசுகிறது என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ உள்ளிட்ட அதன் கூட்டணித் தலைவர்கள் நம்பிக்கையோடு பிரசாரம் செய்தார்கள்.

சென்னை, மதுரை, திருச்சியில் குறைவு
வாக்குப் பதிவு நடைபெற்ற நேற்று நிகழ்ந்தது என்ன? சென்னை, மதுரை, திருச்சி என பெருநகரங்களில் வாக்கு பதிவு சதவீதம் மிகக் குறைவானதாகவே இருக்கிறது.

அலைவீசவில்லை..
இதுபோன்ற பெருநகரங்களில் இருக்கும் புதிய இளம் தலைமுறை வாக்காளர்களைத்தான் மோடி அலை திரட்டி வந்து வாக்குச் சாவடிகளில் நிறுத்திவிடும் என்று தேமுதிக, மதிமுக, பாஜக ஆகியவை கூறின. ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை.

நடுத்தர ஓட்டு நம்பிக்கை தருகிறது- இல. கணேசன்
இப்படி வாக்குப் பதிவு குறைந்திருப்பது குறித்து, புதிய இளம் தலைமுறை வாக்காளர்களை பெரிதும் நம்பியிருந்த தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் இல. கணேசன் கூறுகையில், வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தும் கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் வாக்குப் பதிவு அதிகம் இல்லைதான். ஆனாலும் நடுத்தர மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று வாக்களித்தது நம்பிக்கை தருகிறது என்று தடலாடியாக மாற்றிப் பேசுகிறார்.

திமுகவுக்கு பாதகம்- பேராசியர் ராமு மணிவண்ணன்
இந்த வழக்கமான வாக்குப் பதிவு குறித்து கருத்து தெரிவித்திருக்கும் சென்னை பல்கலைக் கழகத்தின் மூத்த பேராசிரியர் ராமு மணிவண்ணன், தமிழகத்தில் மோடி அலை உட்பட எந்த ஒரு அலையும் இல்லை. அதே நேரத்தில் இது திமுகவுக்கு சாதகமாக இருக்காது. அதிமுகவுக்குத்தான் சாதகமாக இருக்கும் என்கிறார்..

நம்பிக்கை இருக்கிறது- இளங்கோவன்
ஆனால் திமுகவின் தென் சென்னை வேட்பாளர் டி.கே.எஸ். இளங்கோவனோ, கடந்த தேர்தலில் 18 தொகுதிகளை திமுக கைப்பற்றியது. இம்முறை அதைவிட கூடுதல் இடங்கள் எங்களுக்குக் கிடைக்கும் என்கிறார். ஆனால், அதற்கான காரணம் என்ன என்று சொல்லவில்லை.

கூட்டணி என்கிற கூட்டல் கழித்தல் தான்...
கடந்த தேர்தலைப் போலத்தான் இம்முறையும் வாக்குப் பதிவு நடந்துள்ளது.. வாக்குகளைப் பங்கு போடுகிற கட்சிகளும் அதே அளவுதான்.. ஆனால் கூட்டணி என்கிற கூட்டல் கழித்தலில்தான் அவை வெல்லும் இடங்களின் எண்ணிக்கை இருக்கிறது என்பதே உண்மை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications