தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யுமாம்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
கேரளாவில் கடந்த 30ஆம் தேதி தொடங்கிய பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்திலும் பருவமழை தொடங்கியுள்ளது.
இதனால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் கூட நேற்று பரவலாக மழை பெய்தது.

மேகமூட்டத்தில் சென்னை
இன்றும் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் கொளுத்தும் வெயிலில் இருந்து சற்று விடுதலை கிடைத்திருப்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வளிமண்டலத்தில் சுழற்சி
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு உள்ளதாக அவர் கூறினார்.

2 நாட்களுக்கு மழை
இதன் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அவர் கூறினார். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒருசில இடங்களில் மழை பெய்யும் என்றும் பாலச்சந்திரன் கூறினார்.

இன்றும் மழை
கடந்த 24 மணி நேரத்தில் உத்திரமேரூரில் அதிகப்பட்சமாக 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் இன்றும் தொடர்ந்து மழைபெய்து வருகிறது.












Click it and Unblock the Notifications