மக்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் விநியோகிக்கும் தவ்ஹீத் ஜமாத்.. கடையநல்லூரில்!
கடையநல்லூர்: நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இரண்டு இடங்களில் நில வேம்பு கசாயம் தயார் செய்து வினியோகம் செய்யப்பட்டது.

தற்போது மேற்கு தொடர்ச்சி மலை அருகில் அமைந்துள்ள நகரங்களான ராஜபாளையம், சிவகிரி, வாசுதேவநல்லூர், புளியங்குடி, கடையநல்லூர் ஆகிய ஊர்களில் டெங்கு மற்றும் விஷக் காய்ச்சல் பரவுவதை தடுக்கின்ற விதத்தில் அரசு தீவீர முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகிறது. இந்நிலையில் வரும் முன் காப்போம் என்ற அடிப்படையில் கடந்த சில நாட்களாக கடையநல்லூர் நகர் பகுதிகளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் பொதுமக்களுக்கு நில வேம்பு கசாயம் தயார் செய்து வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இன்று காலை 8 மணியளவில் கடையநல்லூர் பேட்டை புளியமுக்கு தெரு மற்றும் மதினாநகர் பகுதிகளில் நிலவேம்பு மூலிகைகளால் தயார் செய்யப்பட்ட மூலிகை சாறை பொதுமக்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வழங்கபட்டது. 10வது முகாமை கடையநல்லூர் நகராட்சி தலைவி சைபுன்னிசாசேகனா தொடங்கி வைத்தார். இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் பயன் அடைந்தனர்.

இதுவரை கடையநல்லூர் நகர் பகுதியில் நடத்தப்பட்ட 10 நிலவேம்பு கசாய முகாம்கள் மூலம் 24000 க்கும் மேற்பட்ட பெதுமக்கள் பயனடைந்தனர். இந்நிகழ்ச்சியில் தவ்ஹீத் ஜமாத்தின் பேட்டை கிளை நிர்வாகிகள் நிரஞ்சர் ஒலி, அப்துல் காதர், பிலால் சித்திக், முகம்மது சித்திக் மற்றும் மதினாநகர் கிளை நிர்வாகிகள் பாதுஷா, அபுபக்கர், மைதீன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை பேட்டை மற்றும் மதினாநகர் கிளை மருத்துவரணி செயலாளர்கள் உசைன் மற்றும் ஹாலித் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications