தமிழர்களுக்கு ரயில்வே வேலைவாய்ப்பு மறுப்பு: தமிழ் அமைப்புகள் போராட்டம்
சென்னை: வேலை வாய்ப்புகளில் தமிழர்களை ரயில்வேத்துறை புறக்கணிப்பதாக குற்றம்சாட்டி தமிழர் எழுச்சி இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை தமிழர் எழுச்சி இயக்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது. தமிழர் எழுச்சி இயக்கத்தின் பொதுச் செயலாளர் வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், ம.தி.மு.க.வின் மல்லை சத்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ரயில்வே துறையில் நெறிமுறைகளை மீறி திட்டமிட்டு தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர். கடந்த பத்து ஆண்டுகளில் நடைபெற்ற ஆர்.ஆர்.பி மற்றும் ஆர்.ஆர்.சி தேர்வுகளில் தென்மண்டல ரயில்வே துறையி் 8 சதவீதம் கூட தமிழர்களை தேர்வு செய்யவில்லை என்றும் அவர்கள் கோஷமிட்டனர்.
எனவே, 2014ம் ஆண்டுமுதல் தென்மண்டல ரயில்வே துறையில் நடைபெறும் ஆர்.ஆர்.பி. மற்றும் ஆர்.ஆர்.சி. தேர்வில் தமிழர்களுக்கு 70 சதவீதம் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். 2013 டிசம்பர் மாதம் நடைபெற்ற பயிற்சி பணியாளர் தேர்வில் சட்ட நெறிகளுக்கு மாறாக தேர்வு செய்யப்பட்ட அறிவிப்பு ஆணையை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, அதன்மீது விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.












Click it and Unblock the Notifications