செளந்தர்யா ரஜினிகாந்த் உருவ படத்தை எரித்து ஜல்லிக்கட்டு அமைப்பினர் போராட்டம்
திருச்சி: விலங்குகள் நல வாரியத் தூதர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தி செளந்தர்யா ரஜினிகாந்த் உருவபடத்தை தமிழர் வீர விளையாட்டுப் பேரவையில் திருச்சியில் இன்று எரித்தனர்.
தமிழகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுவுக்கு மிக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது விலங்குகள் நல வாரியம். இந்த அமைப்பு தமிழர்களின் கலாசாரத்தை அழிக்கிறது என்பது குற்றச்சாட்டு.
இதனிடையே விலங்குகள் நல வாரியத்தின் தூதராக ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஜல்லிக்கட்டை கடுமையாக எதிர்க்கும் விலங்குகள் நல வாரியத்துக்கு தூதராக உள்நோக்கத்துடன் செளந்தர்யா நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது தமிழர் வீர விளையாட்டுப் பேரவையின் குற்றச்சாட்டு.
ஆகையால் செளந்தர்யா உடனே அப்பதவியில் இருந்து விலக வேண்டும்; இல்லையெனில் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று அந்த அமைப்பின் தலைவர் ராஜேஷ் எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று திருச்சியில் தமிழர் வீர விளையாட்டுப் பேரவையினர் செளந்தர்யா ரஜினிகாந்த் படங்களை எரித்து போராட்டம் நடத்தினர்.