ரஜினி பற்றி.. தமிழருவி மணியன் பேசியது இது.. வைரலாகும் வீடியோ
ரஜினிகாந்தை விமர்சித்து தமிழருவி மணியன் பேசிய வீடியோ பதிவு வைரலாக ஷேர் செய்யப்படுகிறது.
சென்னை: எல்லோருக்கும் நண்பனாக இருப்பவன் உண்மையில் எவனுக்குமே நண்பனாக இருக்கமாட்டான் என ரஜினிகாந்த் குறித்து காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் பேசிய பழைய வீடியோ பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சட்டசபை தேர்தலின் போது திமுக, அதிமுகவுக்கு மாற்றாக ஒரு அணியை உருவாக்க முயற்சித்தவர் தமிழருவி மணியன். அண்மைக்காலமாக ரஜினிகாந்துடன் இணைந்து செயல்படுகிறார் தமிழருவி மணியன்.
தற்போது ரஜினிகாந்த் அரசியலில் குதித்திருக்கிறார். ஆன்மீக அரசியலை முன்வைக்கப் போவதாக ரஜினிகாந்த் அறிவித்திருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சு.சுவாமி கருத்து
இந்நிலையில் ரஜினிகாந்தை விமர்சித்து தமிழருவி மணியன் பேசிய பழைய பேச்சின் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் தமிழருவி மணியன் பேசியுள்ளதாவது: ஜல்லிக்கட்டு வரவேண்டும் என்பதற்காக தமிழகமே திரண்டது. டெல்லியில் உட்கார்ந்து கொண்டு சுப்பிரமணியன் சுவாமி பொறுக்கிகள் கூட்டம் என்றார்.
டெல்லி பொறுக்கி
ஆனால் உண்மையில் கமல்ஹாசனை பாராட்ட வேண்டும். கமல்ஹாசன் ட்விட்டரில் ரொம்ப அழகாக சொன்னார், உண்மையில் நான் தமிழ்நாட்டு பொறுக்கி.. மற்றவர்களைப் போல டெல்லியில் பொறுக்குவதில்லை என்று. 4 மணிநேரம் சொன்னாலும் இவ்வளவு வன்மையாக சொல்ல முடியாது.
ஓபிஎஸ் தொடர்பாக கமல்
இப்பொழுது கூட சசிகலா வருவதில் எனக்கு விருப்பம் இல்லை முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் பன்னீர்செல்வம் தவறு செய்தவராக தெரியவில்லை. எனவே அவர் தொடருவதுதான் நல்லது என்று தன்னுடைய கருத்தை வெளிப்படையாக கூறியுள்ளார்.
ரஜினியை விமர்சித்த தமிழருவி மணியன்
கொஞ்சம் ரஜினிகாந்தை சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம்.. ரஜினிகாந்திடம் போய் நின்றால் என்ன சொல்வார் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.. ஒரு பக்கம் பார்த்தால் சசிகலாவும் பரவாயில்லை.. இன்னொரு பக்கம் பார்த்தால் பன்னீர்செல்வமும் பரவாயில்லை. வேறொருபக்கம் பார்த்தால் ஸ்டாலின் கூட பரவாயில்லை. அந்தப் பக்கம் பார்த்தால் ராமதாஸ் கூட பரவாயில்லை. எல்லாருமே பரவாயில்லை. ஒன்று புரியுமா? எல்லாருக்குமே நண்பனாக இருப்பவன் உண்மையில் எவனுக்கும் நண்பனாக இருப்பது இல்லை என்பதுதான் உண்மை. ரஜினிகாந்தை நேசிக்கக் கூடியவர்கள் லட்சக்கணக்கானவர்கள் இந்த மண்ணில் இருக்கிறார்கள். நானும் ரஜினிகாந்தை நேசிக்கிறேன். ஆனால் லட்சக்கணக்கானவர்களின் நேசத்துக்குரிய ரஜினிகாந்த், கமல்ஹாசனை போல வாய் திறக்க வேண்டாமா?
இவ்வாறு தமிழருவி மணியன் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.