தேமுதிக கால் ஊன்றிவிடக் கூடாது என்பதற்காக ராமதாஸ் பிரசாரம் செய்யவில்லை: தமிழருவி
சென்னை: வட மாவட்டங்களில் தேமுதிகவை வளரவே விடக்கூடாது என்பதற்காகத்தான் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிரசாரம் செய்யவில்லை என்று காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் குற்றம்சாட்டியுள்ளார்.
நக்கீரன் வாரம் இருமுறை இதழுக்கு தமிழருவி மணியன் அளித்த பேட்டியில் இதுபற்றி கூறியுள்ளதாவது:
பா.ஜ.க. தலைமையிலான தே.ஜ. கூட்டணி இந்த தேர்தலில் தமிழகத்தில் 19 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இந்த சதவீதம், 25 ஆக உயர்ந்து 15 இடங்களில் வெற்றியும் பெற்றிருக்க முடியும்.
அது நடைபெறாமல் போனதற்கு அடிப்படைக் காரணம், மருத்துவர் ராமதாஸ், விஜயகாந்த் இருவரின் அணுகுமுறைதான்.
விஜயகாந்தின் ஆரம்பகால அரசியல் ஊசலாட்டங்களும் ராமதாசின் பிடிவாதமான புறக்கணிப்பும் மாதக்கணக்கில் தொகுதி உடன்பாடு காண்பதில் கடைப்பிடித்த கேலிக்கூத்துகளும் கூட்டணி தலைவர்கள் ஒருங்கிணைந்து ஒரே மேடையில் கூட வாக்காளர்களை சந்திக்காமல் தவிர்த்ததும் தான் மோடியை மையமாக கொண்டு மக்களிடம் மலர்ந்த ஆதரவை முறியடித்துவிட்டது.
மேலும் பா.ம.க.வும் தே.மு.தி.க.வும் ஒன்றிணைந்து வேலை பார்க்கவில்லை. எந்தச் சூழலிலும் வட தமிழகத்தில் தே.மு.தி.க. வளர்ந்து விடக்கூடாது என்று பா.ம.க.வும், நமது வாக்கு வங்கியால் பா.ம.க. பலம் பெற்றுவிடக்கூடாது என்று தே.மு.தி.க.வும் மறைமுகமாக கத்தி தீட்டியது. அதனால்தான் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் போனது.
கூட்டணியில் இருக்காது பா.ம.க.
வாக்காளர்களுக்கு நன்றி சொன்ன ராமதாஸ், தே.ஜ.கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி என்று சொல்லாமல் பா.ம.க. வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி என்றே சொல்லியிருக்கிறார். இதிலிருந்தே அவரது நிலைப்பாடு என்னவென்று அறிந்துகொள்ள முடிகிறது. அதனால், இந்த கூட்டணி நீடிக்கும் என்பது சந்தேகம்தான்.
மேலும், தே.ஜ.கூட்டணி இந்த இருவர் மூலம் வலிமை பெறும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.
இவ்வாறு தமிழருவி மணியன் கூறியுள்ளார்.