ஆர்.கே.நகரில் அமைச்சர்கள் மாறுவேடத்தில் ஸ்கூட்டரில் பயணம்... தமிழிசை புகார்
ஆர்.கே.நகரில் அமைச்சர்கள் மாறுவேடத்தில் ஸ்கூட்டரில் தங்கள் அடையாளத்தை மறைத்துக் கொண்டு பயணம் செய்கின்றனர் என்று பாஜக தேசிய தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
சென்னை : ஆர்.கே.நகரில் அமைச்சர்கள் மாறுவேடத்தில் ஸ்கூட்டரில் தங்கள் அடையாளத்தை மறைத்துக் கொண்டு பயணம் செய்வதாக பாஜக தேசிய தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் புகார் கூறினார்.
ஆர்.கே.நகரில் வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட இந்த தேர்தல் பணப்பட்டுவாடா புகாரினால் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் ஆர்.கே.நகரில் மீண்டும் பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது என்று கூறிய தமிழிசை சௌந்தரராஜன் கடந்த சனிக்கிழமை சாலை மறியலில் வேட்பாளர் கரு.நாகராஜனுடன் ஈடுபட்டார்.
இதைத் தொடர்ந்து இன்று தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ஆர்.கே.நகரில் பண நடமாட்டம் அதிகரித்துள்ளது.
தேர்தல் ஆணைய உத்தரவுக்கு புறம்பாக பூத் சிலிப்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. ஆர்.கே நகர் இடைத்தேர்தல் நேர்மையாக நடக்காதென்றால் அதை நடத்துவதில் பயனில்லை.
அமைச்சர்கள் தங்கள் அடையாளத்தை மறைத்துக் கொண்டு ஸ்கூட்டரில் பயணம் செய்கின்றனர். தேர்தல் ஆணையத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.