சசிகலாவை கண்டு கொள்ளாத தமிழிசை- தமிழின தாய் ஜெயலலிதா என புகழாரம்
முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்த வந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன், சசிகலா நடராஜனையும், மன்னார்குடி குடும்பத்தினரையும் கண்டு கொள்ளவில்லை.
சென்னை : தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் திங்கட்கிழமை இரவு காலமானார். அவரது உடல் போயஸ் தோட்டத்து இல்லத்தில் இறுதிச்சடங்கு செய்யப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சித்தலைவர்களும், திரை உலக பிரபலங்களும் இன்று ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தினார். அஞ்சலிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தராஜன் மக்களின் தலைவியாக, தமிழின தலைவியாக திகழ்ந்தவர் ஜெயலலிதா என்று புகழாரம் சூட்டினார்.
ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்த வந்த தமிழிசை சவுந்தரராஜன், அருகில் நின்று கொண்டிருந்த சசிகலாவை கண்டு கொள்ளவில்லை. அதே நேரத்தில் அருகில் நின்று கொண்டிருந்த தம்பித்துரைக்கு வணக்கம் தெரிவித்து விட்டு கிளம்பினார். ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்த வரும் அரசியல் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் யாரும் சசிகலாவை கண்டு கொள்ளவில்லை.