தேமுதிக வராத கோபத்தையெல்லாம் திருமாவளவன் மீது கொட்டித் தீர்க்கும் தமிழிசை!
சென்னை: பாஜக கூட்டணிக்கு தேமுதிக வராத கோபத்தையெல்லாம் வைகோ மீதும், திருமாவளவன் மீதும், இடதுசாரிகள் மீதும் பாஜக தலைவர்கள் கொட்டித் தீர்த்து வருகின்றனர். அந்த வகையில் தேச விரோத சக்திகளுக்கு திருமாவளவன் துணை போகிறார். இதனால் தேச பக்தர்கள் பெரும் கவலை கொண்டுள்ளனர் என்றும் தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை ரொம்பக் கோவமாக அறிக்கை விட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
மக்கள் நல கூட்டணி வழக்கறிஞர்கள் மாநாட்டில் தேச துரோக குற்றச்சாட்டு பிரிவை இந்திய தண்டனை சட்டத்தில் இருந்து ரத்து செய்ய வேண்டும் என்று பேசிய திருமாவளவனின் தேச விரோத சக்திகளுக்கு ஆதரவு குரல், தேச பக்தர்களுக்கு கவலை அளிக்கிறது.

மக்கள் நல கூட்டணி என்ற போர்வையில் தேச விரோதம் என்ற விஷத்தை தமிழகத்தில் தேர்தல் களத்தில் தூவ முயல்வது ஆபத்தானது. அண்ணல் அம்பேத்கர் எழுதிய அரசியல் அமைப்பு சட்டத்தையே தேச விரோத சக்திகளுக்கு ஆதரவாக திருத்த சொல்லும் திருமாவளவனை கண்டிக்கும் திராணி கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கும் இருக்கிறதா?
டெல்லி, ஹைதராபாத் பல்கலைக்கழகங்களில் தேச விரோத குரல்கள் ஒலித்த போது அதை கண்டிக்காமல் அதனை ஒரு சாதிய ஆதரவு குரல் கொடுத்த திருமாவளவன் மற்றும் இடதுசாரி தலைவர்கள் இணைந்த மக்கள் நல கூட்டணி கருத்தாக திருமாவளவன் பேச்சை எடுத்துக்கொள்ளலாமா?
தேச விரோத கருத்துக்களை சாதிய சாயம் பூசி, மோடி அரசுக்கு எதிராக திசை திருப்பும் திருமாவளவன் இடதுசாரிகள் கூட்டணிதான் மக்கள் நல கூட்டணி என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.
இதனால் மக்கள் நல கூட்டணி தமிழகத்தில் குழப்பங்களை ஏற்படுத்த உதவுமே தவிர மக்களின் நலம் காக்க உதவாது என்பதனை திருமாவளவன், வைகோ போன்றவர்களின் சமீபகால பேச்சுக்களும், நடவடிக்கைகளும் உணர்த்துகின்றது என்று கூறியுள்ளார் தமிழிசை.












Click it and Unblock the Notifications