"வக்கிரப் புத்தி" இளங்கோவன் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட தயாரா?.. தமிழிசை சவால்
சென்னை: பிரதமர் மோடியை கொச்சைப்படுத்துகிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன். பெண்களைக் கொச்சைப்படுத்துகிறார். என்னைக் கொச்சைப்படுத்துகிறார். தனது கட்சியைச் சேர்ந்த விஜயதாரணியைக் கொச்சைப்படுத்தினார். வக்கிரப் புத்தி கொண்டவராக அவர் இருக்கிறார். நாகரீகத்தை பாஜகவிடமிருந்து அவர் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சாடியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், பிரதமர் மோடி அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசியதைக் கிண்டல் செய்து பேசியிருந்தார். இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்று சென்னையில் பாஜக சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்து தமிழிசே பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு விசா கொடுக்க மறுத்தது அமெரிக்கா. ஆனால் இப்போது அதே அரசாங்கம் சிவப்பு கம்பள வரவேற்பு மட்டும் அல்ல அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடி பேசியபோது 66 முறை எம்.பி.க்கள் கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். அத்தகைய பெருமை பெற்ற பிரதமர் மோடியை கொச்சைப்படுத்துகிறார் இளங்கோவன்.
என்னையும் கொச்சைப்படுத்தி விமர்சித்து இருக்கிறார். எதிர்க்கட்சிகாரர்கள் மட்டுமின்றி அவர்கள் கட்சியை சேர்ந்த விஜயதரணியையும் இளங்கோவன் கொச்சைப்படுத்தி உள்ளார். பெண்கள் பற்றி அவரிடம் வக்கிரப்புத்தி இருக்கிறது. நாகரீக அரசியலை அவர் எங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும். தமிழிசை என்ற பெயரை தமிழ் இசையா? வசையா? என்று விமர்சிக்கிறார். எனக்கு நல்ல பெயரும் இருக்கிறது. அரசியலிலும் நல்ல பெயர் இருக்கிறது.

கண்டெய்னர் பணத்தில் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கமிஷன் வாங்கியதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இளங்கோவன் கூறி வருகிறார். கண்டெய்னர் பணத்தில் கமிஷன் வாங்கி கட்சி நடத்தும் நிலையில் நாங்கள் இல்லை. ஒரு வேளை இளங்கோவன் காங்கிரஸ் ஆட்சியில் இப்படி பணம் நடமாடவில்லையே. நாம் கமிஷன் அடித்து இருக்கலாமே என்று நினைத்து இருக்கலாம்.

கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக. முதுகில் ஏறி குறைந்த வாக்கு சதவீதத்தை காங்கிரஸ் தக்க வைத்து உள்ளது. இரட்டை இலக்கத்தில் போட்டி போட்டு ஒற்றை இலக்கத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. நாங்கள் வருகிற உள்ளாட்சி தேர்தலில் தனித்து நின்று பல நகராட்சிகளையும், மாநகராட்சிகளையும் கைப்பற்றுவோம். காங்கிரஸ் தனித்து நிற்க முடியுமா? என்று நான் சவால் விடுகிறேன். என்னை விமர்சித்துக் கொண்டிருப்பதற்குப் பதிலாக நீங்களும் தனியாக நில்லுங்கள். உங்களுக்கு என்ன கிடைத்து விடும் என்பதைப் பார்த்து விடுவோம் என்றார் தமிழிசை.












Click it and Unblock the Notifications