மக்கள் நலக்கூட்டணி தேர்தலுக்கு முன்பே உடையும்: தமிழிசை சவுந்தரராஜன் ஆருடம்
சென்னை: அண்ணன் வைகோ அவர்கள் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் மக்கள் நலக்கூட்டணி தேர்தலுக்கு முன்பே உடைவது உறுதி என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆருடம் கூறியுள்ளார்.
மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்த கூட்டணியின் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக மற்றும் பாமகவிற்கு இடமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கூட்டணியை வலிமைப்படுத்தும் நோக்கில் ஒத்த கருத்துடைய கட்சிகள் வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சியினர் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே வைகோவின் பேட்டி குறித்து கருத்து கூறியுள்ள பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நாங்கள் கூட்டணிக்கு வருகிறோம் என்று கூறாத நிலையில், அவர்களாகவே எங்களை சேர்க்கமாட்டோன் என்று எப்படி கூறலாம் என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், மக்கள் நலக் கூட்டணியில் உள்ள கட்சிகள் தேர்தல்வரை நீடிப்பார்களா? என்பதே கேள்விக்குறிதான். இந்த கூட்டணி தேர்தலுக்கு முன்பே உடைந்து போகும் என்றும் தமிழிசை தெரிவித்தார். அண்ணன் வைகோ அவர்கள் தலைமையிலான இந்த தமிழக மக்கள் நலக்கூட்டணியை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?, இவர்கள் இதுவரை எத்தனை போராட்டங்களை நடத்தியுள்ளனர் என்றும் கேள்வி எழுப்பினார்.