ஜெ. சிகிச்சை குறித்து ஏன் இப்படி மாத்தி மாத்திப் பேசுறீங்க ஓபிஎஸ்? கேட்கிறார் தமிழிசை
ஜெயலலிதாவின் மரணம் குறித்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மாற்றி மாற்றிக் கருத்துக் கூறுவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து ஓ.பன்னீர் செல்வம் மாறி மாறி கருத்துக் கூறி வருவது மிகவும் வேடிக்கையாக உள்ளது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம் 22ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இரவு 10.30 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். அன்றிலிருந்து 75 நாட்கள் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அவர் டிசம்பர் 5ஆம் தேதி மறைந்தார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓ.பன்னீர் செல்வம் முன்பு ஒருமுறை கூறுகையில், ஜெயலலிதாவை மேல்நாட்டுக்கு சிகிச்சை அளிக்க அழைத்துச் செல்லுமாறு தம்பிதுரையிடம் கூறியதாகக் குறிப்பிட்டார். ஆனால், அதனை சசிகலா குடும்பத்தார் தடுத்ததாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, ஜெயலலிதாவை மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு கொண்டு செல்வதை அமைச்சர் விஜயபாஸ்கர் தான் தடுத்தார் என கூறியுள்ளார்.
இவ்வாறு, ஜெயலலிதாவின் சிகிச்சை குறித்து ஓ.பன்னீர் செல்வம் மாற்றி மாற்றி கருத்துக் கூறி வருவது மிகவும் வேடிக்கையாக உள்ளது என தமிழக பாஜக தலைவர் தமிழைசை கூறியுள்ளார்.
ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்தபோது, முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.