வட மாநிலம், தென் மாநிலம் என பாகுபாடு பார்த்து பிரதமர் நிதி ஒதுக்குவது இல்லை: தமிழிசை சவுந்தரராஜன்
சென்னை: பிரதமர் நிதி ஒதுக்கும்போது வட மாநிலம், தென் மாநிலம் என்று பார்த்து ஒதுக்குவது இல்லை. சேதத்திற்கு ஏற்ப தான் நிதி ஒதுக்குகிறார் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சுத்தமான இந்தியா திட்டத்தின்கீழ் பாஜகவினர் சுத்தம் செய்து வருகிறார்கள். சென்னை தியாகராயநகர் சாலைகளில் பாஜகவினர் வியாழக்கிழமை சுத்தம் செய்தனர்.

அந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலாளர் ஹெச். ராஜா, மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், மோகன்ராஜுலு, துணை தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தெருக்களை சுத்தம் செய்தனர்.
அதன் பிறகு தமிழிசை செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிகுந்த சேதம் ஏற்பட்டுள்ளது. பாஜக சார்பில் மக்களுக்கு நிவாரண பொருட்களை அளித்து வருகிறோம். இன்று சுத்தமான இந்தியா திட்டத்தின்கீழ் சென்னை நகர சாலைகளை சுத்தப்படுத்துகிறோம். சென்னையில் தொற்றுநோய் பரவாமல் இருக்கவே நாங்கள் சாலைகளை சுத்தம் செய்கிறோம். பொது மக்களும் சாலைகளை சுத்தம் செய்ய முன் வர வேண்டும்.
பிரதமர் நிதி ஒதுக்கும்போது வட மாநிலம், தென் மாநிலம் என்று பார்த்து ஒதுக்குவது இல்லை. சேதத்திற்கு ஏற்ப தான் நிதி ஒதுக்குகிறார். தமிழகத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதம் பற்றி அறிந்த உடன் பிரதமர் நிவாரண நிதியை அறிவித்ததோடு மீட்பு பணிகளில் ஈடுபட முப்படைகளை அனுப்பி வைத்தார். மேலும் அவரே நேரில் வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
மாநிலத்தில் மருத்துவ முகாம்கள் நடத்த, வங்கிகள் ஞாயிற்றுக்கிழமையும் செயல்பட அவர் உத்தரவிட்டார். மத்திய மற்றும் மாநில அரசுகள் சேர்ந்து தான் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதை அரசியல் கட்சிகள் அரசியலாக்கக் கூடாது என்றார்.












Click it and Unblock the Notifications