கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தவர்களுக்காக சினிமாக்காரர்கள் உதவ வேண்டும்: தமிழிசை
சென்னை: தங்களது கட் அவுட்களுக்குப் பாலாபிஷேகம் செய்த தொண்டர்கள் இன்று மழை வெள்ளத்தில் தவிக்கும்போது திரைத்துறையினரும் உதவி செய்ய முன்வர வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை கோரிக்கை விடுத்துள்ளார்.
பாஜக தொடர்ந்து உதவி செய்து வருவதாகவும், அதுபோல பல கட்சிகளும் உதவி வருவது ஆறுதல் தருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

முதல் நாளிலிருந்தே
மழை வெள்ள பகுதியில் முதல்நாளில் இருந்து பா.ஜ.க. தொண்டர்கள் உதவிகளை செய்து வருகிறார்கள். அரசாங்கத்தை நம்புவதைவிட அனைத்துக் கட்சி தொண்டர்களும் நிவாரணப் பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தேன்.

கரங்கள் நீண்டு வந்தால்தான்
பல கட்சியினரும் நிவாரணப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது ஆறுதல். அதைப்போல பல கரங்கள் நீண்டு வந்தால்தான் மக்களுக்கான உதவிகளை செய்ய முடியும். அதனால் முதல்வர் உடனே சர்வ கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்ட வேண்டும்.

அனைத்துக் கட்சிக் கூட்டம்
பாதிப்புகளை எப்படி சீர் செய்வது என்றும் பின்பும் பாதிப்புகள் ஏற்படாமல் இருப்பது எப்படி என்றும் பலகட்சித் தலைவர்களின் ஆலோசனைகள் உதவியாக இருக்கும்.

சினிமாத் துறையினர் உதவ வேண்டும்
தங்கள் கட்-அவுட்களுக்கு பால் அபிஷேகம் செய்யும் தொண்டர்கள் பாலுக்காக அழும் குழந்தைகளுக்கு உதவி தொண்டு செய்ய வேண்டும் என்று திரைப்படத் துறையினரும், நிவாரணத்தில் ஈடுபட வைப்பது, மக்களின் துயர்துடைப்பதில் அவசியாகும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்கும்போது மிகுந்த மனவேதனையாக உள்ளது. குளங்கள் வீடுகளாக மாறியதால் தான் சாலைகள் குளங்களாக மாறி உள்ளது. நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் தயவு தாட்சண்யமின்றி அகற்றப்பட வேண்டும்.

அரசியல் ஆதரவு இருந்தாலும்
அதற்கு பின்னால் எந்த அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் இருந்தாலும், அவை எல்லாம் அப்புறப்படுத்தப்பட வேண்டும். இல்லை என்றால் மழைநீரை சேமிக்க வாய்ப்பே இல்லை.

யாரும் கட்டுப்படுத்த முடியாது
3 மாதம் பெய்ய வேண்டிய மழை ஒரு நாளில் பெய்தால் என்ன செய்வது என்று முதல்வர் கூறியுள்ளார். இயற்கையை யாரும் கட்டுப்படுத்த முடியாது.

அரசின் கடமை என்ன
அதனை தாங்கும் சக்தியாக கட்டமைப்பை உருவாக்குவது அரசின் கடமை. கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை, நிவாரணப்பணிகள் முழுமையடையவில்லை என்பது எனது கருத்து. தாழ்வான பகுதிகளில் மக்கள் வாழும் இடங்கள் மிக மோசமாக மாறிவிட்டது. வருங்காலத்தில் எத்தகைய மழை வந்தாலும் தாங்கும் கட்டமைப்பு வசதியை மேற்கொள்ள வேண்டும்.

பேரிடர் மேலாண்மை இல்லை
மழை வரும்போது மட்டும் கவனம் செலுத்தாமல் தொடர்ந்து கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரிடர் மேலாண்மை என்பது தமிழகத்தை பொறுத்த மட்டில் காகிதத்தில் மட்டும் தான் உள்ளது. அது சரியாக செயல்பட்டிருந்தால் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் இப்படி தத்தளித்து இருக்காது.

என்னாகப் போகிறதோ ரூ. 500 கோடி
தமிழக வெள்ள பாதிப்புகளை பார்ப்பதற்கும், உதவி செய்வதற்கும் மத்திய மந்திரிகள் குழு வர இருக்கிறது. தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.500 கோடி நிவாரணம் எந்த அளவிற்கு பயன்படுத்தப்படும் என்று தெரியவில்லை என்றார் டாக்டர் தமிழிசை.












Click it and Unblock the Notifications