ரூ. 200 கோடி செலவாகுமாம்.. அடுத்த தமிழக அரசை தேர்ந்தெடுக்க!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு கிட்டத்தட்ட ரூ. 200 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தலில் அரசியல் கட்சிகள் எந்த அளவுக்கு செலவு செய்யுமோ, கிட்டத்தட்ட அதே அளவுக்கு செலவு செய்ய வேண்டிய நிலையில் தேர்தல் ஆணையமும் உள்ளது.
செய்கூலி சேதாரம் இல்லாமல் நகை செய்ய முடியாது என்பார்கள். அதேபோலத்தான் பெரும் செலவைத் தவிர்க்காமல் சட்டசபைத் தேர்தலை நடத்த முடியாத நிலை. தேர்தலுக்குத் தேர்தல் செலவுகள் கூடிக் கொண்டேதான் போகின்றன.

ரூ. 200 கோடி செலவு...
இந்த சட்டசபைத் தேர்தலை நடத்தி முடிக்க கிட்டத்தட்ட ரூ. 200 கோடி வரை செலவாகும் என்று தேர்தல் ஆணையம் மதிப்பிட்டுள்ளது.

மொத்த செலவும்...
சட்டசபைத் தேர்தலைப் பொறுத்தவரை மத்திய அரசே முழு செலவையும் ஏற்கும். அதேசமயம், லோக்சபா தேர்தலாக இருந்தால் மத்திய, மாநில அரசுகள் செலவைப் பகிர்ந்து கொள்ளும்.

செலவு உயர்வு...
2011ல் தமிழகத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலின்போது தேர்தல் ஆணையம் ரூ. 148 கோடி அளவுக்கு செலவிட்டது. ஆனால் தற்போது செலவுத் தொகை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.

சம்பளம் அதிகரிப்பு...
தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஊழியர்களுக்கான சம்பளம் பெருமளவில் அதிகரித்து விட்டதால் இந்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலுக்கான செலவு ரூ. 198 கோடி வரை ஆகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஏற்பாடுகள்...
இவ்வளவு செலவில் முக்கால்வாசிக்கும் மேலான தொகை, ஊழியர்களுக்கான சம்பளத்திற்காகவே போய் விடுகிறது. அதாவது படிக்காக போய் விடுகிறது. மீதமுள்ளவை தேர்தலுக்கான ஏற்பாடுகளுக்கு ஆகும் செலவாகும்.

வெப் கேமரா..
வாக்குப் பதிவை வீடியோ எடுப்பது, வெப் கேமரா மூலம் கண்காணிப்பது, புகைப்படம் எடுப்பது ஆகியவற்றும் செலவு அதிகமாகும்.

கூடுதல் ஊழியர்கள்...
கடந்த சட்டசபைத் தேர்தலில் பணியாளர்களுக்கு ரூ. 82 கோடி சம்பளமாக வழங்கப்பட்டது. இந்த தேர்தலில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் எண்ணிக்கை கூடுதலாக 2 ஆயிரம் பேர் வரை ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

150 % அதிகரிப்பு...
கடந்த லோக்சபா தேர்தலுக்கு ரூ. 3,500 கோடி செலவிடப்பட்டது. இது 2009 லோக்சபா தேர்தலை விட 150 சதவீதம் அதிகமாகும். 2009 தேர்தலில் ரூ. 1400 கோடி தான் செலவிடப்பட்டது.












Click it and Unblock the Notifications