காவிரி விவகாரம்.. 4வது நாளாக ஒசூரில் நிறுத்தப்பட்ட தமிழக பஸ்கள்.. தனியார் பஸ்களில் கூட்டம்
சென்னை: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து காவேரியில் கர்நாடகா அரசு தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. இதனால் இன்று கர்நாடகா மாநிலத்திலுள்ள விவசாயிகள் கன்னட அமைப்புகள் மாநில அரசை கண்டித்து தீவிர போராட்டத்தில் குதிக்க உள்ளதால் கர்நாடகா வாழ் தமிழ் மக்கள் மிக அச்சத்துடன் உள்ளனர்.
தமிழக கர்நாடகா மாநில எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட அமைப்பினர் நான்காவது நாளாக காவிரி நீர் திறந்துவிடுவதை எதிர்ப்பு தெரிவித்து போராடுவதால் இரண்டு மாநில போலீசாரும் குவிக்கப்ட்டுள்ளனர்.
காவேரியிலிருந்து, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கூடாது எனக்கோரி அம்மாநில விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்புகள் சார்பில் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் காரணமான தமிழகத்திலிருந்து ஒசூர் வழியாக கர்நாடகா மாநிலத்திற்கு செல்லும் தமிழக அரசு பேருந்துகள் நிறுத்தம் செய்யப்பட்டன இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் தொடரும் காவேரி போராட்டத்தின் காரணமாக நான்காவது நாளாக இன்று தமிழகஅரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
வழக்கம்போல கர்நாடகா அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கர்நாடகா பேருந்துகள் மைசூர் மார்க்கத்தில் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளன.
ஆனால் தமிழக பஸ்களோ ஒசூரோடு நிற்பதால் பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர். தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் தனியார் மற்றும் கர்நாடகா பேருந்துகளில் பொதுமக்கள் கூட்டம் அதிககமாக நிரம்பியது.