காவிரி உயர்தொழில்நுட்ப குழுவுடன் தமிழக தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் சந்திப்பு
சென்னை: காவிரி உயர் தொழில்நுட்பக் குழுவினருடன், தமிழக தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் இன்று காலை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
காவிரி நதிநீர் விவகாரத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் கடந்த 4-ம் தேதி தேசிய நீர்வள ஆணைய தலைவர் ஜி.எஸ்.ஜா தலைமையில் காவிரி உயர் தொழில் நுட்பக் குழுவை அமைத்தது.
இதில் மத்திய நீர் ஆணைய உறுப்பினர் ஜி.மசூத்ஹூசேன், ஹைதராபாத்தை சேர்ந்த கிருஷ்ணா மற்றும் கோதாவரி அமைப்பின் தலைமை பொறியாளர் ஆர்.கே.குப்தா, தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களை சேர்ந்த தலைமைச் செயலாளர்கள் அல்லது அவர்களது பிரதிநிகள், தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி மாநிலங்களின் தலைமை பொறியாளர்கள் உள்ளிட்ட 14 பேர் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
இந்த குழு கடந்த 7 மற்றும் 8 ஆகிய இரு தினங்களில் கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு காவிரி நதிநீர் படுகையில் அமைந்துள்ள (கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி) அணை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது. கர்நாடகத்தின் குடிநீர், பாசனத்துக்கு எவ்வளவு தண்ணீர் தேவையுள்ளது என கள ஆய்வு மேற்கொண்டது.
அதைத்தொடர்ந்து கடந்த இரு தினங்களாக தமிழகத்தில் இந்த குழு ஆய்வு மேற்கொண்டது. தமிழகத்தில் மேட்டூர் அணை பகுதியில் ஆய்வு மேற்கொண்டது. அணையின் நீர் இருப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்த இக்குழு பின்னர் வருவாய்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தனர். பின்னர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பாவானி சாகர் அணைகளையும் இக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
பின்னர் திங்கள்கிழமை (நேற்று) காவிரி டெல்டா பாசன பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களுக்கு சென்றும் மத்திய தொழில் நுட்பக் குழுவினர் முழுமையான ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்த விவசாயிகள் காவிரி தொழில்நுட்பக்குழுவிடம் தங்களது நிலைமைகளை எடுத்து கூறினர். அவர்களின் கருத்துக்களை தொழில்நுட்பக்குழுவினர் கேட்டறிந்தனர்.
இரு மாநிலங்களிலும் ஆய்வு செய்த காவிரி உயர் தொழில்நுட்பக்குழுவினர் திங்கள்கிழமை இரவு சென்னை திரும்பினர். சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஒட்டலில் தங்கியிருந்த காவிரி உயர்தொழில்நுட்ப குழுவினரை, தமிழக தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் இன்று காலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, டெல்லி திரும்பும் இக்குழு வரும் 17-ம் தேதி தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளது.