தேர்தலுக்கு முன்னதாகவே தமிழகத்தில் காங்கிரஸ் காணாமல் போய்விட்டது: பாஜக
சென்னை: தேர்தலுக்கு முன்னதாகவே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி காணாமல் போய்விட்டது என்றும், பாஜக கூட்டணியில் எவ்வித கருத்து வேறுபாடுகளும் இல்லை எனவும் அக்கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் முரளிதரராவ் தெரிவித்துள்ளார்.
தேசியக் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகக் கூட்டணியில் தேமுதிக மற்றும் பாமக இணைவது குறித்து தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அதிகாரப்பூர்வமாக கூட்டணி அறிவிக்கப் படாத நிலையில் பாஜகவுடன் தொகுதிப் பங்கீட்டில் பாமக, தேமுதிக கட்சிகளுக்கு இடையே இழுபறி நிலவுவதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் பாஜக கூட்டணியில் எவ்வித கருத்து வேறுபாடுகளும் இல்லை என தெரிவித்துள்ளது பாஜக. இது தொடர்பாக அக்கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் முரளிதரராவ் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது தமிழக கூட்டணி தொடர்பாக அவர் கூறியதாவது:-
பாஜக கூட்டணியில் உள்ள தேமுதிக, பாமக, மதிமுக போன்ற கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது. கூட்டணிக் கட்சிகளுடன் கருத்து வேறுபாடுகள் எதுவும் இல்லை. அதுபோல வெளியான செய்தி தவறானது.
இன்னும் இரண்டு அல்லது மூன்று நாள்களில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும். பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் கூட்டணியை முறைப்படி அறிவிக்க உள்ளார். அதற்கான தேதியை மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் விரைவில் அறிவிப்பார்.
நாடு முழுவதும் நரேந்திர மோடி அலை வீசுகிறது. நரேந்திர மோடியின் செல்வாக்கால் தமிழகத்தில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும். தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து விடப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பாகவே காங்கிரஸ் காணாமல் போய்விடும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின்போது தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications