காவிரி மேலாண்மை வாரியம் - மார்ச் 26 முதல் டெல்லியில் விவசாயிகள் உண்ணாவிரதம்- பி.ஆர்.பாண்டியன்
காவிரி விவகாரம் தொடர்பாக டெல்லியில் தமிழக விவசாயிகள் 26ம் தேதி முதல் உண்ணாவிரதம்இருக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.
மன்னார்குடி : காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை உள்நோக்கத்தோடு தொடர்ந்து தாமதப்படுத்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து தமிழக விவசாயிகள் 26ம் தேதி முதல் டெல்லியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அனைத்து விவசாயிகள் குழு ஒருங்கிணைப்புத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருகிறது.

கர்நாடக சட்டசபைத் தேர்தலை மனதில் வைத்து, செயல்பட்டு வரும் மத்திய பாஜக அரசு இனியும் தமிழக விவசாயிகளை வஞ்சிப்பது சரியல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய நீர்வளத்துறைச் செயலாளர் யு.பி.சிங், வருகிற 30ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை என்று கூறி இருப்பதே உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். எனவே, அவர் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்குத்தொடர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கர்நாடகம் தவிர்த்து மற்ற இரண்டு மாநில முதல்வர்களோடு பிரதமர் மோடியைச் சந்தித்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதன் நோக்கத்தை வலியுறுத்தவேண்டும் என்றும் அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுவதைக் கண்டித்து வருகிற 26ம் தேதி முதல் தமிழக விவசாயிகள் நூற்றுக்கணக்கானோர் டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications