முக்கிய வழக்குகளில் அடுத்தடுத்து சறுக்கும் தமிழக அரசு.. நீதிமன்றங்களில் வாதம் செல்லுபடியாகவில்லை
சென்னை: முக்கியமான நீதிமன்ற வழக்குகளில் அடுத்ததடுத்து சறுக்கி வருகிறது தமிழக அரசு.
சமீபத்தில் நடந்த சில முக்கிய வழக்குகளில், சென்னை உயர்நீதிமன்றம் அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராகத்தான், தீர்ப்போ அல்லது உத்தரவுகளோ பிறப்பித்துள்ளன.
தமிழக அரசின் சார்பில், சமர்ப்பிக்கப்படும் வாதங்கள் ஏன் சறுக்குகிறது என்ற ஆலோசனையை அரசு சட்ட வல்லுநர்கள் மேற்கொள்ள துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குட்கா ஊழல்
தமிழகத்தில் நடந்த குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணை தேவையில்லை என்று வாதிட்டது தமிழக அரசு. ஆனால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். சிபிஐ தற்போது விசாரணையை நடத்தி வருகிறது. பல இடங்களில் சோதனைகள் நடத்தியுள்ளது.
சிபிஐ விசாரணை
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை நியாயமாக விசாரித்து வருவதாக மாநில அரசு கூறியபோதிலும், விசாரணை கமிஷனை அமைத்து உள்ள நிலையிலும் கூட உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்தது.
பொன்.மாணிக்கவேல் விசாரணை
தூத்துக்குடி வன்முறை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிலரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததை ரத்து செய்து உத்தரவிட்டது நீதிமன்றம் தான். கோயில் சிலைகள் மோசடி செய்யப்பட்ட வழக்கில் பொன்.மாணிக்கவேல் விசாரணை வேண்டாம் என்று கூறி விசாரணையை சிபிஐ இடம் தந்தது தமிழக அரசு. ஆனால் உயர் நீதிமன்றமோ, சிலை கடத்தல் விசாரணையை பொன்.மாணிக்கவேலிடம் அளித்தது.
எட்டு வழிச்சாலை
திமுக தலைவர் கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்ய மெரினாவில், இடம் தர தமிழக அரசு மறுத்த போதும் மெரினாவில் இடம் வழங்குவதற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. முக்கியமான இன்னொரு வழக்கான, சேலம்-சென்னை 8 வழி சாலை விவகாரத்திலும், விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது. நிலத்தில் இருந்த அவர்களை அகற்றக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்றம்.