மழைக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுக்குதே.. அடடே!
சென்னை: தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. கண்கெட்ட பிறகு அதிமுக அரசுக்கு புத்தி வந்துள்ளதோ என்று நெட்டிசன்கள் கேலி செய்ய ஆரம்பித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமையன்று தென் மேற்கு வங்கக் கடலில் இலங்கை கடற்கரைக்கு அருகே குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது. அது தீவிர குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறி, திங்கள்கிழமை வட மேற்கு நோக்கி நகர்ந்தது.
தற்போது சென்னைக்கு தென் கிழக்கே 125 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. அது நாளை காலை 5.30 மணிக்கு சென்னை - ஆந்திரா இடையே கரையை கடக்கும் என எதிர்பாக்கப்படுகிறது. இதனால் சென்னையில் இன்றிரவு கனமழை பெய்யும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

சென்னை அருகே
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 125 கிலோ மீட்டர் தொலைவில் வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இது புதன்கிழமை காலை சுமார் 5.30 மணி அளவில் சென்னை கடற்கரையை ஒட்டி ஆந்திரக் கடற்கரையை நோக்கி செல்லும்.

கன மழை
இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மிக அதிகமான கன மழைய கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மிகுந்த கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்
மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேக காற்று வீச வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள். தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கும்படி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

அதிக மழை
மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் மழை அதிகம் பெய்யக் கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்பார்வையிட அனுப்பப்பட்டுள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுபவம்
மழை குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள எச்சரிக்க விரிவானதாக உள்ளது. இதை கடந்த டிசம்பரில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டதால் வந்த அனுபவ பாடம் என்று தெரிகிறது.

முன்பு இல்லை
இதற்கு முன்பும் 2 முறை ஆட்சியில் இருந்த ஜெயலலிதா அரசால் கடந்த டிசம்பர் மாத மழையின்போது முன்னெச்சரிக்கை எடுக்க முடியாதது ஏன் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

சேதம் அதிகம்
டிசம்பர் மாதம் பெய்த மழையால் கடலூர், நாகப்பட்டிணம், திருவாரூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பல கடலோர மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது. மனித உயிர்கள், கால்நடைகள், விளைபொருட்கள் அழிந்தன.

திடீர் ஞானோதயம்
தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையோ, எச்சரிக்கையோ கொடுக்காமல் தூங்கிய மாநில அரசு மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில், இப்போதைய மழையை முன்னிட்டு மாநில அரசு மக்களுக்கு எச்சரிக்கைவிடுத்துள்ளது. இதுபோல துரித நடவடிக்கையை கடந்த மழைக்காலத்தில், முன்கூட்டியே எடுத்திருந்தால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்குமே என்பதுதான் மக்களின் கேள்வி.












Click it and Unblock the Notifications