7 தமிழர் விடுதலையில் திமுக கூட்டணிக்கு செக் வைக்க சூப்பர் வாய்ப்பு.. செய்வாரா எடப்பாடி பழனிச்சாமி?
Recommended Video
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 25 வருடங்களுக்கும் மேலாக சிறையில் உள்ள நளினி, பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலையை தமிழக அரசு முடிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, 7 தமிழர்களை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்தார். ஆனால், இதை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில், வழக்கு கொடர்ந்தது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கு சிபிஐயால் விசாரிக்கப்பட்டது. எனவே மாநில அரசு இதில் முடிவெடுக்க முடியாது. மத்திய அரசு ஒப்புதல்தான் இதில் அவசியம் என வழக்கு தொடரப்பட்டது.
சுப்ரீம் கோர்ட் அதிரடி
இந்த வழக்கை, ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டோர் தரப்பில் வாதிடுகையில், 25 வருடங்களுக்கு மேலாக சிறையில் உள்ளோம். எங்கள் மரண தண்டனை என்பது, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டபோதிலும், நாங்கள் 25 வருடங்களை சிறையில் கடந்துவிட்டோம் எனவே நாங்கள் விடுதலைக்கு தகுதியானவர்கள் என வாதிடப்பட்டது.
தமிழக அரசு கையில் முடிவு
இதை கேட்ட நீதிபதிகள், மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை முடித்து வைத்துள்ளனர். எனவே, தமிழக அரசின் கையில் இப்போது முடிவு விடப்பட்டுள்ளது. தமிழக அரசு ஏழுபேரையும் விடுதலை செய்து அருமையான முடிவை எடுக்க முடியும்.
பல்வேறு விமர்சனங்கள்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு, சேலம் 8 வழிச்சாலை, சோபியா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தமிழக அரசு பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில், 7 பேரையும் விடுதலை செய்வதன் மூலம், ஒட்டுமொத்த தமிழர்கள் ஆதரவை பெற அதிமுக அரசுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஈழப் பிரச்சினையை காங்கிரஸ்-திமுக கூட்டணி சரியாக கையாளாத நிலையில், சில அறிவிப்புகள் மூலமாக 'ஈழத்தாயாக' திடீரென மாறினார் ஜெயலலிதா.
சென்டிமென்ட்
எப்போதுமே தமிழக மக்கள் சென்டிமென்ட்டானவர்கள். 7 தமிழர் விடுதலையிலும், இந்த சென்டிமென்ட்டை தமிழக அரசு கையில் எடுத்தால், அதற்கு ஆதரவு பெருகும். இதை செய்து, எடப்பாடி பழனிச்சாமி அரசு தமிழகத்தில் தனக்கான வலுவான அடித்தளம் அமைக்க முடியும்.
அருமையான வாய்ப்பு
இதில் மற்றொரு அருமையான வாய்ப்பும் எடப்பாடி அரசுக்கு உள்ளது. 7 தமிழர்களை விடுதலை செய்வதை கண்டிப்பாக காங்கிரஸ் கட்சி வழக்கம்போலவே எதிர்க்கும் வாய்ப்புள்ளது. காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் உள்ளது. எனவே, இந்த விஷயத்தில், அரசு பாசிட்டிவ் முடிவு எடுத்தால், ஸ்கோர் செய்ய முடியும் என்பதோடு, திமுக-காங்கிரஸ் கூட்டணியை விமர்சனம் செய்யவும் வாய்ப்பை ஏற்படுத்தி தரும். இதை எடப்பாடி பழனிச்சாமி அரசு மிஸ் செய்யாது என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.