தமிழக சட்டசபையில் நடந்தது என்ன?: குடியரசு தலைவருக்கு ஆளுநர் அறிக்கை! ஆட்சி கலைப்புக்கு வாய்ப்பா?
சட்டசபை நிகழ்வுகள் தொடர்பான அறிக்கையை நேற்று, குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அனுப்பியுள்ளார்.
சென்னை: சட்டசபையில் நடைபெற்ற கலவரம் குறித்து குடியரசு தலைவருக்கு, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கையனுப்பியுள்ளார்.
தமிழக சட்டசபையில் கடந்த 18ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி தனது ஆட்சி மீது நம்பிக்கை கோரி வாக்கெடுப்பு தீர்மானம் தாக்கல் செய்தார்.
அப்போது அவையில் திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் மதியம் 3 மணி அளவில் திமுக உறுப்பினர்களை குண்டுக்கட்டாக வெளியேற்றிய பின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கைகலப்பு
அந்த களேபரத்தின்போது, ஸ்டாலின் சட்டை கிழிக்கப்பட்டது. முன்னதாக சபாநாயகர் தனபால் எதிர்க்கட்சி உறுப்பினர்களால் இழுபறிக்கு உள்ளானார். கை கலப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானது. இந்த சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஆளுநர் அறிக்கை
அப்போது நடந்த சட்டசபை நிகழ்வுகள் தொடர்பான அறிக்கையை நேற்று, குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அனுப்பியுள்ளார்.
நடந்தது என்ன?
அதில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தன்னை சந்தித்து தாக்கப்பட்டதாக புகார் கூறியது, ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கையை சபாநாயகர் புறக்கணித்தது உள்ளிட்ட பல விஷயங்கலை அறிக்கையில் ஆளுநர் தெரிவித்துள்ளதாக ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆட்சி கலைப்பு?
இதில் ஆட்சி கலைப்பு பறற்றி ஏதேனும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளாரா என்ற தகவல் வெளியாகவில்லை. அனேகமாக ஆட்சி கலைப்பு பற்றி ஆளுநர் எதுவும் கூறியிருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில். ஆளுநரின் நடவடிக்கையால் கோபமடைந்துதான் திமுக உண்ணாவிரத முடிவுக்கு வந்ததாகவும் கூறுகிறார்கள்.