(இதுவரை) 5 முதல்வர் வேட்பாளர்கள் கிடைச்சிருக்காங்க: பாஜகவும் ஒருவரை இறக்கி விடலாமே!
சென்னை: மக்கள் நல கூட்டணியுடன் தேமுதிக கட்சி கூட்டணி அமைத்துள்ள நிலையில், தமிழ்நாட்டு அரசியலில் என்றுமில்லாத அதிசயமாக இப்போது 5 முதல்வர் வேட்பாளர்கள் முன்னிறுத்தப்படுகிறார்கள்.
1967ல் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்திவிட்டு, திமுக ஆட்சிக்கு வந்தது. பிறகு, அதிலிருந்து எம்.ஜி.ஆர் தலைமையில் பிரிந்த அதிமுக ஆட்சியமைத்தது. இவ்விரு கட்சிகளுமே சுமார் அரை நூற்றாண்டு காலம் ஆட்சி நடத்தி வருகிறார்கள்.
எனவே ஒவ்வொரு தேர்தலின்போதும், திமுக மற்றும் அதிமுக தவிர்த்த பிற கட்சிகள் தங்களை இவ்விரு கட்சிகளின் தலைமை கூட்டணிக்காக அழைக்காதா என்று ஏங்கிக்கொண்டிருப்பது வாடிக்கை.

திமுக பலவீனம்?
இந்நிலையில், 2016 சட்டசபை தேர்தல் புது பரிணாமத்தை அடைந்துள்ளது. இதற்கு திமுக பலவீனமடைந்துவிட்டதாக ஏற்பட்டுள்ள தோற்றமும், அதை நிரூபிக்கும் வகையில் அதன் தலைவர்கள் நடந்து கொள்ளும் விதமுமே காரணம்.

சர்ச்சைகள்
2011 சட்டசபை தேர்தலின்போது, திமுகவால் எதிர்க்கட்சியாக கூடவர முடியவில்லை. ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும், அதிமுக கூட்டணியில் இருந்துதான் உதயமாகின. இதற்கு காரணம், ஈழப் படுகொலை விவகாரமும், 2ஜி ஊழல் சர்ச்சையும்தான் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை.

அடுத்தடுத்து தோல்வி
2014 நாடாளுமன்ற தேர்தலின்போதும், மக்களின் கோபம் குறைந்தபாடில்லை. போதாத குறைக்கு, பாஜக தலைமையில், தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் ஓரணியில் திரண்டதால் வாக்குகள் சிதறி, தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் ஒன்றில் கூட திமுகவால் வெல்ல முடியவில்லை.

முதல் குறி திமுக
இந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த எதிர்க்கட்சிகள், திமுகவை ஓரம்கட்ட முடிவு செய்து கோதாவில் குதித்தன. இவ்வாறு திமுகவை பலவீனப்படுத்தினால் அதிமுக மட்டுமே எதிரியாக மிஞ்சியிருக்கும். பிறகு அந்த கட்சியை மட்டும் குறிவைத்தால் போதும் என்பது எதிர்க்கட்சிகள் திட்டம்.

பாமக தனித்து போட்டி
இதையடுத்துதான், பாமக தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. திமுகவுடன் மட்டுமல்ல அதிமுகவோடும் கூட்டணியில்லை என பல மாதங்கள் முன்பே பாமக அறிவித்தது. இதையடுத்து அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட்டார்.

சீமான்
இதேபோல, நாம் தமிழர் கட்சி சார்பில் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முதல்வர் வேட்பாளராக முன்னிருத்தப்பட்டுள்ளார். பாமக மற்றும் நாம் தமிழர் ஆகிய இரு கட்சிகளுமே 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது.

விஜயகாந்த்
இந்நிலையில், மக்கள் நல கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். அக்கூட்டணியும், மாநிலம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தை உத்வேகத்தோடு தொடங்க உள்ளது.

கருணாநிதி, ஜெயலலிதா
திமுகவில் கருணாநிதிதான் முதல்வர் வேட்பாளர் என ஸ்டாலின் உட்பட அனைத்து கட்ட தலைவர்களும் அறிவித்துள்ளனர். அதேபோல, அதிமுகவில் அறிவித்தாலும், அறிவிக்காவிட்டாலும் ஜெயலலிதாதான் முதல்வர் வேட்பாளர்.

5 முதல்வர்கள்
ஆக மொத்தம், தமிழகத்தில் தற்போதைய நிலையில், 5 முதல்வர் வேட்பாளர்கள் வலம் வருகிறார்கள். வழக்கமாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளில் இருந்தும்தான் கிங்குகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பிற கட்சியினர் கிங் மேக்கராகதான் இருப்பார்கள். இம்முறை 5 முனையில் தேர்தல் தாக்குதல் தொடங்கியுள்ளது.
அப்படியே பாஜகவும் ஒரு முதல்வர் வேட்பாளரை போட்டுவிட்டால் 6 முனை போட்டியை உருவாக்கலாம்.. செய்வீர்களா? செய்வீர்களா?












Click it and Unblock the Notifications