நாடு முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்... டெல்லியில் ஜனாதிபதி தொடங்கிவைத்தார்!
இளம்பிள்ளைவாதத்தை தடுப்பதற்காக 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து முகாம் நாடு முழுவதும் நாளை நடக்கிறது.
சென்னை : நாடு முழுவதும் நாளை 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடுவதற்கான முகாம் நடைபெறுகிறது. தமிழகத்திலும் இதற்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் சமார் 17 கோடி குழந்தைகளுக்கு இலவசமாக போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. இதற்கான சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை நாடு முழுவதும் நடைபெறுகிறது.
போலியோ முகாமை தொடங்கி வைக்கும் விதமாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லி ராஷ்ட்ரிய பவனில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டாவும் பங்கேற்றார்.
எங்கெங்கு சொட்டு மருந்து போடலாம்
தமிழகத்தில் மொத்தம் 71 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து தருவதற்கான சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள், பள்ளிகளிலும் போலியோ சொட்டு மருத்து போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
5 வயது வரையிலான குழந்தைகளுக்கு
இதே போன்று பயணிகள் அதிகம் கூடும் பேருந்து, ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களிலும் போலியோ சொட்டு மருந்து போடுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பிறந்த குழந்தை முதல் 5 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ போடுவது கட்டாயம்.
ஏற்கனவே போட்டிருந்தாலும்
ஏற்கனவே எத்தனை முறை சொட்டு மருந்து போட்டிருந்தாலும் நாளைய முகாமில் பங்கேற்று போலியோ மருந்து போட்டுக் கொள்ளலாம். காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2ம் தவணையாக போலியோ சொட்டு மருந்து மார்ச் 11ம் தேதி வழங்கப்பட உள்ளது.
கட்டாயம் போட வேண்டும்
போலியோ சொட்டு மருந்து முகாம்கள் மூலம் இளம்பிள்ளைவாத நோய் என்பது இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடிக்க வேண்டுமெனில் போலியோ சொட்டு மருந்தின் அவசியத்தை உணர்ந்து கட்டாயம் உங்கள் குழந்தைகளுக்கும் போலியோ மருந்து கொடுத்து அவர்களின் எதிர்காலத்தை வளமாக்குங்கள்.