தமிழகத்தில் இடியோடு மழைபெய்யும்... குடை அவசியம் மக்களே - எச்சரிக்கும் வானிலை மையம்
தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை : வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்கு இன்னும் 10 நாட்கள் இருந்தாலும், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் தென்மேற்குப் பருவமழை புரட்டி எடுக்கிறது.

இதன் காரணமாக தமிழகத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து குடிநீர் பிரச்னையை தீர்த்துள்ளது.
இதனிடையே தெலங்கானா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.
வடதமிழகம் மற்றும் புதுச்சேரியல் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரை அதிகபட்சமாக நிலக்கோட்டையில் 7 சென்டிமீட்டர் மழையும், மதுரை மாவட்டம் சிட்டம்பட்டியில் 6 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications