தலித் எழுத்தாளர் துரை குணாவை விடுதலை செய்க.. சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு வலியுறுத்தல் !
சென்னை: பொய்யான புகாரில் கைது செய்யப்பட்ட தலித் எழுத்தாளர் துரை குணா, தலித் செயற்பாட்டாளர் பூபதி கார்த்திகேயன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளை கைவிட்டு அவர்களை உடனடியாக காவல்துறை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே குளந்திரான் பட்டு ஊராட்சி ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர் து.குண சேகரன். இவர் துரை.குணா என்ற பெயரில் ‘ஊரார் வரைந்த ஓவியம்' என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். இந்நிலையில் துரை குணாவும் அவரது நண்பர் கார்த்திகேயனும் இணைந்து சிவானந்தம் என்பவரை தாக்கியதாக கரம்பக்குடி போலீஸார் அண்மையில் கைது செய்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட தலித் எழுத்தாளர் துரை குணா, தலித் செயற்பாட்டாளர் பூபதி கார்த்திகேயன் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என இந்திய சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் பிரச்சாரகர் மேக்பீஸ் சிட்லோ இன்று விடுத்துள்ள அறிக்கையில், ''கடந்த 10 ஆம் தேதியன்று சிவானந்தம் என்பவர் மதுரை கரம்பக்குடி காவல் நிலையத்தில் கொடுத்ததாகக் கூறப்பட்ட புகாரில் அந்த இருவரும் கைது செய்யப்பட்டனர். ஆனால் 14 ஆம் தேதியன்று சிவானாந்தம் என்பவர் தான் எந்த புகாரும் அளிக்கவில்லை என்றும், போலீஸார் தன்னிடம் வலுக்கட்டாயமாக வெற்றுத் தாளில் கையெழுத்து வாங்கிக்கொண்டனர் என்றும் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.
உயர் சாதி வகுப்பைச்சேர்ந்த உள்ளூர் காவல் துறை அதிகாரிக்கு எதிராக குரல் எழுப்பியதற்காக இந்த இருவரையும் பழிவாங்கும் நோக்கில் கைது செய்துள்ளனர் என்று மதுரையின் எவிடன்ஸ் எனும் தன்னார்வக் குழுவைச் சேர்ந்த கதிர் கூறியுள்ளார்.
இது குறித்து புதுக்கோட்டை எஸ்.பி மற்றும் கரம்பக்குடி காவல்துறை அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவர்கள் பதிலளிக்கவில்லை. பொய்யான புகாரில் கைது செய்யப்பட்ட தலித் எழுத்தாளர் துரை குணா, தலித் செயற்பாட்டாளர் பூபதி கார்த்திகேயன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளை கைவிட்டு அவர்களை உடனடியாக காவல்துறை விடுதலை செய்யவேண்டும்'' என்று மேக்பீஸ் சிட்லோ கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications