முழு அடைப்பு போராட்டம்- தமிழகத்துக்கான கேரளா பேருந்துகள் நிறுத்தம்
தமிழகம் முழுக்க முழு அடைப்பு போராட்டம் நடப்பதால், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகம் முழுக்க முழு அடைப்பு போராட்டம் நடப்பதால், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் கேரள அரசு பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மக்கள் போராட்டத்தின் போது அங்கு இருந்த மக்கள் மீது தமிழக போலீஸ் கொடூரமாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இதுவரை 13 பேர் மரணம் அடைந்துள்ளனர். இன்னும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த மோசமான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி இன்று தமிழகம் முழுக்க முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. சில இடங்களில் பேருந்து நிறுத்தம் கடைபிடிக்கப்படுதுகிறது.
இந்த நிலையில் பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து தமிழகம் வரும் பேருந்துகள் ஓசூர் அருகே நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் கேரளாவில் இருந்து தமிழகம் வரும் பேருந்துகள் தேனி எல்லை மற்றும் நாகர்கோவிலின் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளது.
இன்று முழுக்க இந்த பேருந்துகள் இயங்காது. பாதுகாப்பு கருதியும், அசம்பாவிதத்தை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுளது.