தமிழகத்தில் மேலும் இரு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு.. செம்பரம்பாக்கம் ஏரியோ வறண்டது
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளபோதிலும், செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் எடுப்பது நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு, பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவ மழை கடந்த ஒரு வாரமாக தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தில் பரவலாக மழை தொடர்கிறது. வரும் இரண்டு நாட்களுக்கு, பல இடங்களில் மழை தொடரும் என வானிலை இலாகா அறிவித்துள்ளது.
சென்னை, கன்னியாகுமரி, ஈரோடு, ராமநாதபுரம், துாத்துக்குடி, கரூர், திருப்பூர், திருவள்ளூர், திருவாரூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில், இரவு மற்றும் அதிகாலையில், வெப்ப சலன மழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையயம் கூறியுள்ளது. புதுச்சேரியிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.
ஆந்திரா முதல் தமிழகத்தின் தென்பகுதி வரை, நிலப்பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை இருப்பதால் உள் மாவட்டங்களில்தான் மழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாம்.
அதேநேரம், காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் எடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தம் 3645 மில்லியன் கனஅடி கொள்ளவு கொண்ட அந்த ஏரியில் வெறும் 86 மில்லியன் கன அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளதால் நீர் எடுக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இனி பெய்ய உள்ள மழைதான் செம்பரம்பாக்கம் ஏரியை காப்பாற்ற வேண்டும்.