Rajinikanth: "கந்து வட்டி" ரஜினி.. என்ஆர்சி விவகாரத்தை திசை திருப்புகிறார்.. தமிமுன் அன்சாரி விளாசல்
Recommended Video
சென்னை: கந்து வட்டி சர்ச்சையில் சிக்கியிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அதிலிருந்து மக்களை திசை திருப்பும் வகையில் தவறான புரிதலுடன் என்ஆர்சி, என்பிஆர், சிஏஏ குறித்து கருத்து தெரிவித்துள்ளார். தெரியாத விஷயத்தைப் பற்றி அவர் பேசாமல் இருப்பதே அவருக்கு மரியாதை என்று மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் இன்று வழக்கம் போல தனது வீட்டுக்கு வெளியே தெருவில் நின்றபடி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவை குறித்தும், போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள் குறித்தும் கருத்து தெரிவித்தார்.

வழக்கம் போல இந்த கருத்துக்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ரஜினி பேச்சு குறித்து மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி:
கந்து வட்டி சர்ச்சை குற்றச்சாட்டிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளவும், மத்திய பாஜகவை திருப்திப்படுத்தவும் ரஜினி இப்படி பேசி வருகிறாரோ என்ற சந்தேகம் உள்ளது.
ரஜினிக்கு சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவை குறித்த ஆழமான பார்வை இல்லை, மத பாகுபாடு காட்டப்படுகிறது என்பதுதான் எங்களது குற்றச்சாட்டு. ஈழத் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பது இன்னொரு குற்றச்சாட்டு. என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றால் இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியர்களுமே பாதிக்கப்படுவார்கள்.
ரஜினியின் பாட்டன் பூட்டன் ஆதாரத்தைக் கேட்டால் அவரால் காட்ட முடியுமா, அவரிடம் ஆவணங்கள் இருக்கிறதா. அடிப்படை விஷயம் கூட தெரியாமல் பேசி வருகிறார். கட்சிகள் தூண்டி விடுவதாக சொல்கிறார். எதார்த்த நிலை அவருக்குத் தெரியவில்லை. யாருடைய கட்டுப்பாட்டிலும் போராட்டத்தில் ஈடுபடுவோர் இல்லை. மக்கள் தன்னெழுச்சியாக போராடி வருகிறார்கள். தலைவர்கள் சொன்னால் கூட அவர்கள் கேட்க மாட்டார்கள்.
அப்படி இருக்கும்போது மக்களை எதிர்க்கட்சியினர் தூண்டி விடுவது போல ரஜினி பேசி வருவது கண்டனத்துக்குரியது. ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை தர வேண்டும் என்று ரஜினி சொல்கிறார். எந்த ஈழத் தமிழர் இரட்டைக் குடியுரிமை கேட்டார். யார் வந்து மனு கொடுத்தார்கள். அவர்கள் கேட்பது இந்தியக் குடியுரிமையைத்தான்.
உண்மை இப்படி இருக்கும்போது திசை திருப்புவது போல ரஜினி பேசுகிறார். தனக்குத் தெரிந்த விஷயத்தை ரஜினி பேச வேண்டும். அப்படிப் பேசினால்தான் அவருக்கு மரியாதை தரும். தெரியாத விஷயங்களை பேசுவதை ரஜினி நிறுத்த வேண்டும் என்று காட்டமாக கூறினார் தமிமுன் அன்சாரி.












Click it and Unblock the Notifications