உங்களுக்கு வந்தா ரத்தம்.. எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா தமிழிசை மேடம்?
ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா நடப்பதால் தேர்தலை ஒத்தி வைக்க கூறும் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக வென்ற உ.பியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர மோசடி குறித்து பேசாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கூறும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை, பாஜக வெற்றி பெறும் மாநிலங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து கண்டு கொள்ளாமல் விடுவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆர்.கே.நகருக்கு 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அதிமுகவின் இரு அணிகளும், திமுக, தேமுதிக, தீபா பேரவை உள்ளிட்ட கட்சிகள் களம் காண்கின்றன.
இந்த தேர்தலில் எப்படியாயினும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு கொண்டு தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும்
இந்நிலையில் ஆர்.கே.நகர் தேர்தலில் பறக்கும் படை அதிகாரிகளால் லட்சக்கணக்கான ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன. பணத்தால் வாக்காளர்களை விலைக்கு வாங்கி நடத்தும் தேர்தலை நடத்தாமல் இருப்பதே நல்லது என்பதால் அதிகாரிகளை மாற்றுவதை விட்டுவிட்டு தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
தேர்தல் அதிகாரியிடம் புகார்
இதுதொடர்பாக ஆர்.கே.நகர் பாஜக வேட்பாளர் கங்கைஅமரனுடன் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்த தமிழிசை, இடைத்தேர்தல் தேதியை ஒத்தி வைக்குமாறு மனு ஒன்றையும் அளித்தார்.
அப்ப அதுக்குப் பேரு என்ன
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் பாஜக வெற்றி வெற்றது. அப்போது எந்த கட்சிக்கு வாக்களித்தாலும் அது பாஜகவை சேரும் வகையில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு நிகழ்ந்ததாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வெளிப்படையாக குற்றம்சாட்டினார்.
குதிரை பேரம்
மேலும் மணிப்பூர், கோவா ஆகிய மாநில சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸை எதிர்த்து போட்டியிட்ட பாஜக இரண்டாவது இடத்தை பிடித்தது. அதாவது காங்கிரஸ் கட்சியை காட்டிலும் குறைந்த இடங்களிலேயே பாஜக வெற்றி பெற்றது. எனினும் சிறிய கட்சிகளின் துணை கொண்டு ஆட்சி கட்டிலில் அமர்ந்தது. குதிரை பேரத்தில் ஈடுபட்டு மோசடி செய்து ஆட்சியை பிடித்ததாக பாஜக மீது எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர்.
கப்சிப் பாஜக
இப்படி வட மாநிலங்களில் பாஜக மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்தபோதிலும், மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்று தேர்தல் முறைகேடு குறித்து புகாருக்கு பதில் சொல்லாமல் வெற்றி களிப்பில் மார்த்தட்டி கொண்டது பாஜக. குறிப்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ரொம்பவே பூரிப்பு காட்டினார்.
பாஜக மீது அதிருப்தி
தமிழகத்தில் விவசாயிகள் பிரச்சினை, ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்டவற்றுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பாஜக மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். திருப்திய திசையெல்லாம் பாஜக மீது கோபமே காணப்படுகிறது. இந்த நேரத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு தங்களுக்கு ரொம்பக் கேவலமாக அமைந்து விட்டால் சமாளிக்க முடியாது என்பதால்தான் தேர்தலையே ஒத்தி வைக்க வேண்டும் என்று தமிழிசை கூறுவதாக தெரிகிறது.