மழை வெள்ளம் எதிரொலி - 4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த அவகாசம் நீ்ட்டிப்பு
சென்னை: கன மழை மற்றும் தொடர் வெள்ளம் காரணமாக கடுமையான பாதிப்பை சந்தித்துள்ள நான்கு மாவட்டங்களில் மின் கட்டணத்தை செலுத்த கூடுதல் அவகாசம் அளித்து உத்தரவி்ட்டுள்ளது தமிழக மின்வாரியம்.
இதுதொடர்பாக மின்வாரியம் சார்பி்ல் வெளியிடப்பட்ட அறிவிப்பில், பருவமழையின் காரணமாக, பொதுமக்களின் நலன் கருதி கடந்த 16ம் தேதி முதல் வரும் 29ம்தேதி வரை மின் கட்டணம் செலுத்த வேண்டிய கடலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மின்நுகர்வோர்கள் வரும் 30ம் தேதி வரை எவ்வித அபராத கட்டணமின்றி தங்கள் கட்டணத்தை செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடை மழை மற்றும் வெள்ளத்தால் கடலூர் மாவட்டம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் பல பகுதிகளில் வெள்ளம் வடியவில்லை. அதேபோல சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
சென்னையின் புறநகர்ப் பகுதிகளான காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல பகுதிகள் இன்னும் நீரில் மூழ்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதைக் கருத்தில் கொண்டே மின்கட்டணம் செலுத்தும் கடைசி நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.