காவிரி மேலாண்மை வாரியம்: தஞ்சை விமானப் படை தளத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
தஞ்சை விமானப் படை தளத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தஞ்சை விமானப் படை தளத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு அதை செயல்படுத்தவில்லை. இதற்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் தமிழக அரசு செவிசாய்க்கவில்லை.

காவிரி நதி நீர் பங்கீட்டுக்கான திட்டத்தை அமைக்க வரைவு திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய அமைச்சர்கள் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் இருப்பதால் உச்சநீதிமன்றத்தில் கால அவகாசம் கோரியது. இதனால் தமிழகத்தில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் தஞ்சாவூரில் உள்ள விமான படை தளத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மணியரசன் தலைமையில் விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் அவர்கள் கேட்காததால் விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.
இந்த போராட்டத்தின் போது மோடியின் உருவபொம்மையை விவசாயிகள் எரித்தனர். மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் உருவபொம்மையும் எரித்தனர்.












Click it and Unblock the Notifications