டாஸ்மாக்கில் ஒரேயடியாக குறைந்த வருமானம்.. இரண்டு மாதங்களில் ரூ730 கோடி வருவாய் இழப்பு!
கடந்த இரண்டு மாதங்களில் டாஸ்மாக் நிறுவனத்துக்கு 730 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் இந்த வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை: தமிழக நெடுஞ்சாலைகளில் இருந்த 3321 டாஸ்மாக் கடைகளை மூடியதால் அரசுக்கு கடந்த இரண்டு மாதங்கலில் மட்டும் அரசுக்கு 730 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உச்சநீதிமன்றம் நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என உத்தரவிட்டதையடுத்து. ஒரே இரவில் தமிழக அரசு 3321 டாஸ்மாக் கடைகளை மூடியது. தமிழக அரசுக்கு அதிக அளவுக்கு வருமானம் தந்துகொண்டிருந்தது டாஸ்மாக் நிறுவனம் தான். உச்சநீதிமன்றதின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டு 3321 கடைகளை ஒரே நாளில் மூடிய காரணத்தால், அரசுக்கு கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 730 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
டாஸ்மாக்கிலிருந்து ஆண்டுக்கு கிட்டத்தட்ட 29,000 கோடி ரூபாய் வருமானம் வந்துகொண்டிருந்தது. தற்போது நெடுஞ்சாலையில் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் ஆண்டுக்கு 15 சதவீதத்துக்கும் அதிகமாக வருவாய் இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.

வரிசை கட்டும் வருவாய் இழப்புகள்
மேலும், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துக் கிளம்புவதாலும் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதனால் அரசுக்கு 4350 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது என அத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நீதிமன்றத் தீர்ப்பு எதிரொலி.
தமிழக அரசின் இரண்டு பிரதான வருவாய் ஆதாரங்கள், டாஸ்மாக்கும் பத்திரப்பதிவுத்துறையும் தான். தற்போது நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை நெடுஞ்சாலைகளில் இருந்து அகற்ற வேண்டும் என்று கூறியதாலும் சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை ஊருக்குள் திறக்கக் கூடாது என உத்தரவு பிறப்பித்து உள்ளதாலும் டாஸ்மாக் வருமானம் கிடுகிடுவென குறைந்துள்ளது.

பத்திரப்பதிவு
பத்திரப்பதிவுத் துறையில் இருந்து கிடைக்கும் வருமானம் தான் தமிழக அரசின் இரண்டாவது பெரிய ஆதாரம். ஆனால், விளை நிலங்களை பதிவு செய்ய உயர்நீதிமன்றம் தடை விதித்து உள்ளதால் கடந்த சில ஆண்டுகளாக பத்திரப்பதிவுத் துறையிலும் வருமானம் இல்லை.

தள்ளாடும் தமிழகம்
ஏற்கனவே ஆளும் கட்சியில் பல்வேறு குளறுபடிகள் நிலவி வருவதால், பொருளாதாரத் துறையில் மந்த நிலை நிலவி வருகிறது என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இதே நிலை நீடித்தால், அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்படும். அது தமிழகத்தின் அனைத்து வளர்ச்சிகளையும் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications