லாரி கவிழ்ந்து தீவிபத்து: ரூ.39 லட்சம் மதுபாட்டில்கள் எரிந்து சேதம்
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே டாஸ்மாக் லாரி கவிழ்ந்து தீ விபத்து ஏற்பட்டதில் ரூபாய் 39லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் எரிந்து நாசமடைந்தது.
மன்னார்குடி கோல்டன் வாட் என்ற மதுபான ஆலையில் இருந்து திருநெல்வேலி டாஸ்மாக்கிற்கு 1100 பெட்டிகளில் 52800 மது பாட்டில்கள் கொண்டு லாரியில் கொண்டு செல்லப்பட்டது.
மதுபானம் ஏற்றிவந்த லாரியை நெல்லை மாவட்டத்தை ரகு என்பவர் ஓட்டிவந்தார். தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் அருகே நான்கு வழிச்சாலையில் லாரி வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த தடுப்பு சுவரில் மோதி லாரி கவிழ்ந்தது. இதில் லாரி இழுத்து சென்று தீபிடித்தது. இதில் லாரியில் இருந்த 39லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்களும் லாரியும் முற்றிலும் எரிந்து நாசமானது.
தீவிபத்தை அடுத்து தூத்துக்குடி விமான நிலைய தீயணைப்பு வாகனம் மற்றும் தூத்துக்குடி சிப்காட் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். விபத்து குறித்து தூத்துக்குடி புதுக்கோட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனால் தூத்துக்குடி திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.