அடிக்குது வெயிலு.. சூடு பிடிக்குது "ஜில் ஜில் கூல் கூல்" பீர் விற்பனை!
சென்னை: வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை சூடு பிடிக்க துவங்கி உள்ளது. இதனால் 25 சதவீதம் அளவுக்கு விற்பனை கூடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் ஆண்டுதோறும் கோடைக்காலங்களில் மதுபானங்களில், குறிப்பாக பீர் விற்பனை அதிகரிப்பது வழக்கம். இந்த ஆண்டும் மற்ற மதுவகைகளை விட பீர் அதிக அளவில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
எனவே, பீர் பிரியர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் தேவையான அளவு பீர் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஜில் பீர்....
விலை அதிகமாக இருந்தாலும் பெரும்பாலான குடிமகன்களின் முதல் தேர்வு, குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்ட ‘ஜில்' பீர் தான். எனவே அதற்கும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
விற்பனைச் சரிவை சீர் செய்ய...
வெயில் காரணமாக மற்ற மதுபானங்களை விட பீருக்கே குடிமக்களிடம் அதிக வரவேற்பு இருக்கும். எனவே, மற்ற மதுபானங்களில் ஏற்படும் விற்பனைச் சரிவை பீர் மூலம் ஈடு செய்ய டாஸ்மாக் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
தட்டுப்பாடு...
கடந்த ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு தினந்தோறும் 6,500 முதல் 10 ஆயிரம் பெட்டி வரை பீர் தேவை என்ற நிலையில், 4,000 பெட்டி வரைதான் வினியோகம் செய்யப்பட்டது. இதனால், கடும் தட்டுப்பாடு காணப்பட்டது. அதனால், நடப்பாண்டில் விற்பனை இலக்கை பூர்த்தி செய்ய பீர் விற்பனையை அதிகரிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
10,000 பெட்டிகள்...
இது தொடர்பாக டாஸ்மாக் அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘நடப்பு கோடையில், தட்டுப்பாடு இன்றி பீர் விற்பனை மேற்கொள்ள தேவையான, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. மாவட்டம் முழுவதும் உள்ள ‘டாஸ்மாக்‘ கடைகளில், ஒரு நாள் பீரின், சராசரி விற்பனை, 10 ஆயிரம் பெட்டிகள் ( ஒரு பெட்டி, 12 பாட்டில்) என கணக்கிடப்பட்டுள்ளது.
விற்பனை அதிகரிப்பு...
மாதத்துக்கு, மூன்று லட்சம் பீர் பெட்டி சப்ளை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. தற்போது, வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால், பீர் விற்பனை 25 சதவீதம் வரை அதிகரித்து உள்ளது‘ என்றார்.