500, 1000 ரூபாய் நோட்டுகளை வாங்க டாஸ்மாக் ஊழியர்கள் மறுப்பு.. மதுப்பிரியர்கள் ஏமாற்றம்
டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைப் வாங்க மறுத்ததால் மதுப்பிரியர்கள் அவதிக்குள்ளாகினர்.
சென்னை: டாஸ்மாக் மதுபான கடைகளில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாங்க ஊழியர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மதுப்பிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்
நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. பெட்ரோல் பங்க், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் நவம்பர் 11-ந் தேதி வரை ரூபாய் நோட்டுக்கள் செல்லும் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசின் உத்தரவை ஏற்காமல் ரூ500 மற்றும் ரூ1,000 நோட்டுகளை வாங்க மறுத்து வருகின்றன பெட்ரோல் நிலையங்கள்.
அது ஒரு புறம் இருக்க, தமிழகத்தை பொறுத்த வரை அதிக பணம் நடமாடும் இடங்களில் முக்கிய பங்கு வகிப்பது டாஸ்மாக் கடைகளும் ஒன்று. இங்கு எவ்வளவு பணம் கொண்டு போனாலும் சில்லறை கிடைக்கும். அந்த அளவுக்கு வியாபாரம் நடக்கிறது. ஒரு சிலர் ரூபாய் நோட்டுக்களை எளிதாக மாற்றிக்கொள்ள நாடுவது டாஸ்மாக் கடைகள் தான்.
இதனிடையே மத்திய அரசின் திடீர் உத்தரவால் ரூ. 1000 ரூ.500 நேட்டுக்கள் வாங்க கூடாது என டாஸ்மாக் கடைகளுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் டாஸ்மாக் மதுபான கடையில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாங்க ஊழியர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
ரூ.500 ஆயிரம் நோட்டுக்களை டாஸ்மாக்கடைகளில் மாற்றிக் கொள்ளலாம் என நினைத்தவர்கள் இதனால் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்பட மாட்டாது என்று அறிவிப்பு பலகை வைத்துள்ளது மதுப்பிரியர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் சில்லறையுடன் வந்தால் மட்டுமே மது வழங்கபடும் என கூறுவதால் டாஸ்மாக் ஊழியர்களுடன் மதுப்பிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மதுப்பிரியரகள் சில்லரை கிடைக்காமல் திண்டாடினர். இந்த நிலை இன்றாவது மாறுமா என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.