மிலாடி நபி தினத்தில் மது விற்பனை- திருப்பூரில் 5 டாஸ்மாக் பார் ஊழியர்கள் கைது
திருப்பூர்: திருப்பூரில் மிலாடி நபி நாளில் கடையை திறந்து வைத்த டாஸ்மாக் பார் ஊழியர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் அரசு அறிவிப்பையும் மீறி மிலாடி நபி நாளில் பெருமநல்லூர் நான்கு சாலை குன்னத்தூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதையடுத்து, மாவட்ட கண்காணிப்பாளர் அமித்குமார் சிங் உத்தரவின் பேரில், அவிநாசி துணை கண்காணிப்பாளர் ராமசாமி, மதுவிலக்கு கூடுதல் கண்காணிப்பாளர் விஜயநாச்சியார் ஆகியோர் தலைமையில், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சித்ரா ஆகியோர் அடங்கிய குழுவினர் அந்த டாஸ்மாக் கடை பாரில் அதிரடி சோதனையிட்டனர்.
அப்போது, அந்த கடைக்கு பின்புறம் இருந்த பாரில் வைக்கப்பட்டிருந்த 1,647 மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், விடுமுறை தினத்தில் மதுபானங்கள் விற்பனை செய்ததாக, பார் ஊழியர்களான சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் குமார், சரவணன், அஜித், சிவராஜ், பாலா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக, டாஸ்மாக் பார் உரிமையாளர் மணிகண்டன், பணியாளர் சுப்பிரமணி, பொறுப்பாளர் கண்ணப்பன் ஆகியோரை அவிநாசி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் தேடிவருகின்றனர்.












Click it and Unblock the Notifications