வீட்டு வரி.. குடிநீர் வரி கட்டணத்தை, இனி நேரில் செலுத்த முடியாது.. வரி வசூலில் வந்தது புதிய நடைமுறை
சென்னை: கிராம ஊராட்சிகளில் வீட்டு வரி, குடிநீர் வரி மற்றும் கட்டிட அனுமதி கட்டணம் போன்றவற்றை இனி நேரில் பணமாக செலுத்த முடியாதாம்.. இன்று முதல், ஆன்லைன் வாயிலாக வசூலிக்கும் நடைமுறை அமலாகி உள்ளது.. இதற்கான அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் 2022-23-ம் ஆண்டுக்கான ஊரக வளா்ச்சித் துறை மானிய கோரிக்கையின்போது, ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா், சட்டசபையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்..
இணையதளம்: அதன்படி, ஊரகப் பகுதிகளில் பொதுமக்கள் மனைப் பிரிவுகள், கட்டடம், தொழிற்சாலைகள் தொடங்க, தொழில்நடத்துவதற்கான அனுமதி ஒற்றைச் சாளர முறையில் இணையதளம் மூலம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

மேலும், கிராம ஊராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்கள் இணையவழியில் செலுத்தும் வசதி உருவாக்கப்படும் என்றும் ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் அதிரடியாக தெரிவித்திருந்தார்.. காரணம், கிராம ஊராட்சிகளுக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் போன்றவற்றை ஊராட்சி அலுவலகங்களுக்கு நேரில் சென்றோ அல்லது ஊராட்சி செயலர் மூலமோ செலுத்த வேண்டியிருக்கிறது.
அலைச்சல் கூடாது: இந்த அலைச்சல் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் இந்த சேவைகள் அனைத்தும், இணைய வழியில் பெறும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது... அதன்படியே தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்காக https://onlineppa.tn.gov.in/ என்ற முகவரியும் உருவாக்கப்பட்டு உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளின் நிதி பரிவர்த்தனைகளை
எளிமைப்படுத்தும் விதமாக, மாநில ஒற்றை மைய கணக்கு ஏற்படுத்தப்பட்டு உள்ளது
அதேபோல் கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் எளிதாக தங்களது வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களைச் செலுத்துவதற்கு ஏதுவாக https://vptax.tnrd.tn.gov.in/ எனும் இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது...
இந்த இணையதளத்தின் முழுமையான செயல்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன், கிராம ஊராட்சிகளில் புதிய கட்டடம் கட்டுவதற்கான அனுமதியும் இன்று முதல் இணையதளம் மூலமாக வழங்கப்படுகிறது.. மேலும், ஊரக பகுதிகளில் கட்டடங்களுக்கான அனுமதி வழங்கும் பொறுப்பு கிராம ஊராட்சியின் செயல் அலுவலருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைமுறை: இதற்கான உத்தரவு 2022ல் பிறப்பிக்கப்பட்டாலும், நடைமுறை சிக்கல்களால், இந்த வசதி இப்போதுதான் அமலுக்கு வருகிறது.... தமிழகத்தில் வீடுகளுக்கான சொத்து வரி, குடிநீர் வரி மற்றும் கழிவுநீர் வடிகால் கட்டணங்களை, ஆன்லைன் முறையில் வசூலிக்கும் நடைமுறை, நகராட்சிகள், மாநகராட்சிகளில் ஏற்கனவே அமலாகி உள்ள நிலையில், கிராம ஊராட்சிகளிலும் கட்டண வசூல் பணிகள், ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications