வெள்ள நீரில் மூழ்கிய தாம்பரம் சானட்டோரியம் சுரங்கப் பாதை.. மக்கள் பெரும் அவதி
சென்னை: சென்னை தாம்பரம் சானட்டோரியம் பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் மழை நீர் தேங்கி குளம் போல மாறியுள்ளதால் பொதுமக்கள் அதைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர் மழையால் சென்னை நகரிலும், புறநகர்களிலும் உள்ள பெரும்பாலான சுரங்கப் பாதைகள் நீரில் மூழ்கியுள்ளன. குளங்களாக மாறியுள்ளன. இதனால் அவற்றைப் பயன்படுத்த முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தேங்கிய மழை நீரை வெளியேற்ற உரிய நடவடிக்கையை எடுக்க மாநகராட்சி சார்பில் மெத்தனம் காட்டப்படுவதால் பல இடங்களில் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாம்பரம் சானடோரியம் ரயில் நிலைய சுரங்கப்பாதையின் கிழக்கு பகுதியில் 5 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கி உள்ளதால் சுரங்கப்பாதை மூடப்பட்டது. கடந்த 5 நாட்களாக இந்த சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்காததால் ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
ரயில்வே மதில் சுவர்களை தாண்டியும், தண்டவாளத்தில் நடந்து சென்றும் ஆபத்தான நிலையில் ரயில் ஏற வேண்டிய நிலை உள்ளது. பெண்கள், வயதானவர்கள் தண்டவாளத்தை கடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். சுரங்கப்பாதையில் தேங்கி உள்ள மழைநீரை வெளியேற்றும் மோட்டார் பழுதாகி உள்ளதாகவும், இதனை சீரமைத்து உடனடியாக மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, தாம்பரம் அன்னை அஞ்சுகம் நகர், சமத்துவபுரம் பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் 300-க்கும் மேற்பட்டவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். இந்த பகுதியில் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், அம்பேத்கர் புதுநகர் 5-வது தெருவில் கார்த்திக் என்ற கட்டடத் தொழிலாளி தனது வீட்டில் மோட்டார் சுவிட்ச்சை போட்ட போது ஈரம் காரணமாக ஷாக் அடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications