டிசிஎஸ் பெண் ஊழியர் கொலை: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி ஐடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை: சிறுசேரி சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்திற்குள் டிசிஎஸ் ஊழியர் உமா மகேஸ்வரி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து திங்கட்கிழமையன்று சிப்காட் நுழைவாயிலில் 600க்கும் அதிகமான தகவல் தொழில்நுட்பத்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்படுகொலையைக் கண்டித்தும் , கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் , பெண் பணியாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்த வலியுறுத்தியும் , சேவ் தமிழ் இயக்கம் சிறுசேரியில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்தது.
சிப்காட் தொழிற்பூங்கா நுழைவாயில் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் , 600க்கும் அதிகமான தகவல் தொழிற்நுட்பத்துறையினர் கோரிக்கை பதாகைகளுடன் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தின் போது பேசியவர்கள் கூறியதாவது:
அலட்சியப் போக்கு
பதினைந்து நாட்களுக்கு முன்பு, உமா மகேஸ்வரி காணாமல் போனதாக உமா மகேஸ்வரியை காணவில்லை புகார் கொடுக்கப்பட்டிருந்தாலும் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்காமல், மெத்தனமாகவே இருந்து வந்திருக்கிறது. அப்பெண் பணிபுரியும் டிசிஎஸ் நிறுவனம், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்காமல், 'அந்த பெண் ஏன் பத்து மணிக்கு கிளம்ப வேண்டும்?' என்ற அலட்சியமான கேள்வியை வேறு முன் வைத்திருக்கிறது. இறுதியில் ஒரு பெற்றோர் தன் மகளின் உடலைக் கூட நல்ல நிலையில் பார்க்க முடியாதபடி, அழுகிப்போக வைத்திருக்கிறது, காவல்துறை மற்றும் நிறுவனத்தின் அலட்சியப்போக்கு என்றார் சேவ் தமிழ் இயக்கத்தின் செந்தில்
பாலியல் வன்முறைகள்
பெண் என்பதால் அவள் மீது அதிகாரம் செலுத்தலாம்; பெண் உடல் மீது எத்தகைய பாலியல் வன்முறையையும் ஏவலாம் என்ற கருத்தியலுக்கு இச்சமூகம் பழகியிருக்கிறது. மேலும் இது ஒரு தனிப்பட்ட பிரச்சினையாக பார்க்கப் படுகிறது. சமூகப் பிரச்சினையாக பார்க்கப்படுவதில்லை என்றார் சேவ் தமிழ் இயக்கத்தைச் சேர்ந்த தோழர் பரிமளா.
குற்றவாளியை கைது செய்
இதைத் தொடர்ந்து அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன அவை:
உமா மகேஸ்வரியை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்! சிப்காட் வளாகத்திற்குள் உரிய பாதுகாப்பு தரத்தவறிய சிப்காட் அலுவலர்களை பணியிலிருந்து இடை நீக்கம் செய்.
சோதனைச் சாவடி
சிப்காட்-டிற்கு செல்லும் வழியில் காவல்துறை சோதனைச் சாவடி அமை. மாலை, இரவு நேரங்களில் சமூக விரோத சக்திகளின் நடமாட்டத்தைத் தடுக்க காவல்துறை சிப்காட்-டினுள் ரோந்து செல்லவேண்டும், இதனால் சிப்காட்-டை சுற்றியுள்ள கிராம மக்கள் எக்காரணம் கொண்டும் பாதிக்கப்படக்கூடாது.
வெளிச்சம் தேவை
சிப்காட்-டில் இருந்து அருகிலுள்ள மக்கள் குடியிருக்கும் பகுதிகளான நாவலூர், சோளிங்கநல்லூர், கேளம்பாக்கம் போன்ற பகுதிகளுக்கும், சிப்காட்-டைச் சுற்றியுள்ள சாலைகளிலும், இரவு நேரங்களில் முழு வெளிச்சம் கொடுக்கப்பட வேண்டும்.
சிப்காட் நிர்வாகத்தின் கட்டுபாட்டின் கீழ், சிப்காட்-வளாகத்திற்கு உள்ளும், வெளியும் செல்லக்கூடிய வகையில் போக்குவரத்து வசதியை உருவாக்கு. சிப்காட் பாதையெங்கும் காணொலிபதிவுக் கருவியை நிறுவு.
அவசர எண் அவசியம்
பெண்களுக்கு எதிரான குற்றங்களை அரசுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் அவசர தொடர்பு எண்ணை உருவாக்கு.
பாலியல் தொந்தரவு தடுப்புக்குழு எல்லா நிறுவனங்களிலும் உருவாக்கப்பட்டுள்ளதா என்பதையும், அப்படி ஒரு குழு இருப்பது ஊழியர்களுக்கு தெரிந்துள்ளதா எனவும் ஆய்வு செய்ய வேண்டும்.
டாஸ்மாக்கை அகற்றுக
தகவல் தொழில் நுட்ப ஊழியர்களுக்கு மட்டுமின்றி.அப்பகுதி வாழ் மக்களுக்கும் மற்ற தொழிலாளர்களுக்கும் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வரும் அப்பகுதியில் இருக்கும் டாஸ்மாக்கையும் அகற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகள் அரசுக்கு வைக்கப்பட்டன.
தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு
வெவ்வேறு பணி நேரங்கள் இருப்பதால் நாள் முழுக்க பேருந்து வசதியை வழங்கு. பணியாளர்களை வார இறுதியிலும் வேலைக்கு வர நிர்ப்பந்திக்கப்படுவதால் பேருந்து வசதி வார இறுதியிலும் வேண்டும்.
ஷிப்ட் முறையில் வேலை பார்க்காத பெண்களுக்கான வேலை நேரத்தை மாலை 7 மணியோடு நிறுத்து. அலுவலகத்திற்குள் ஏற்படும் பாலியல் தொந்தரவு தொடர்பாக விசாரிக்க உட்குழுக்களை ஏற்படுத்து போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
குவிந்த ஊழியர்கள்
ஐ.டி ஊழியர்கள் என்றாலே அதிக சம்பளம் பெறுபவர்கள். சுயநலமாக சிந்திப்பவர்கள். சமூகப் பிரச்சினைகளில் தலையிட மாட்டார்கள். அவர்கள் பிரச்சினைகள் பற்றி அவர்களே பேச மாட்டார்கள் என்று ஐ.டி ஊழியர்களைப் பார்த்து வைக்கும் குற்றச்சாட்டை இன்றைய போராட்டத்தின் மூலம் தகர்த்து எறிந்திருக்கிறார்கள். சேவ் தமிழ்சு இயக்கம் இப்போராட்டத்தை ஒருங்கிணைத்திருந்தாலும், அறுநூற்றுக்கும் அதிகமான ஐ.டி ஊழியர்கள், தங்கள் அடையாள அட்டைகளோடு, தன்னெழுச்சியாக சிப்காட் வாயில் முன்பு குவிந்தனர். குற்றவாளியை கைது செய்யக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.