டிசிஎஸ் நிறுவன பெண் சாப்ட்வேர் ஊழியர் பலாத்காரம் செய்து கொலையா?
சென்னை: சென்னை அருகே, டிசிஎஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜீனியராக பணியாற்றி வந்த சேலத்தைச் சேர்ந்த இளம் பெண்ணின் அழுகிய உடல் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இவரைக் காணவில்லை. இதுகுறித்து போலீஸிலும் புகார் தரப்பட்டிருந்தது. இந்த நிலையில் சிறுசேரி ஐடி பூங்காவில் உள்ள அவரது அலுவலகத்திற்கு அருகிலேயே அவரது உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகள் உமா மகேஸ்வரி. சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். மேடவாகத்தில் அறை எடுத்துத் தங்கியிருந்தார்.
கடந்த 13ஆம் தேதி பணிக்கு சென்ற உமா மகேஸ்வரி அன்று மாலை அலுவலகத்தை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால் வீடு வரவில்லை. இதுகுறித்து போலீஸில் புகார் தரப்பட்டது. சிறுசேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில் சிப்காட் ஐடி வளாகத்திலேயே அவர் வேலை பார்த்து வந்த அலுவலகத்திற்கு அருகிலேயே ஒரு முட்புதரில் உமா மகேஸ்வரியின் அழுகிய நிலையில் இருந்த உடலைப் போலீஸார் தற்போது மீட்டுள்ளனர்.
அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவு வந்த பிறகே என்ன நடந்தது என்பது தெரிய வரும் என்று காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. விஜயக்குமார் தெரிவித்துள்ளார்.
தற்போது சந்தேகத்திற்கிடமான மரணம் என்று போலீஸார் வழக்கை மாற்றியுள்ளனர். உமா மகேஸ்வரி பாலியல் பலாத்காரம் செய்ய்ப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
உமா மகேஸ்வரியின் மர்ம மரணம் சென்னையில் தனியாக தங்கி வேலை பார்த்து வரும் வெளியூர் பெண்கள் மத்தியில் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் தனது அலுவலகத்திற்கு அருகிலேயே உமா மகேஸ்வரியின் உடல் கிடந்திருப்பதும் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்புவதாக உள்ளது. அலுவலக வளாகத்தைச் சேர்ந்த வேறு யாருக்கேனும் இதில் தொடர்பு இருக்குமா என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனம் அதிர்ச்சி
உமா மகேஸ்வரியின் மரணம் குறித்து டிசிஎஸ் நிறுவனம் அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உமா மகேஸ்வரி அனைவராலும் நேசிக்கப்பட்ட அருமையான ஒரு பணியாளர் ஆவார். அவரது திடீர் மரணம் எங்கள் அனைவரையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு டிசிஎஸ் குடும்பம் தனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது என்று கூறியுள்ளது.