தனியார் பால் விலை உயர்வு எதிரொலி: காபி, டீ விலையும் உயர்கிறது!
சென்னை: தனியார் பால் விலை அதிகரிக்கப் பட்டுள்ளதால் தமிழகத்தில் காபி, டீ விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் டீக்கடைகள் இருப்பதைக் காண முடியும். ஏனெனில் அந்தளவுக்கு நம்மூரில் டீ, காபி பிரியர்கள் அதிகம். தினமும் 1 கோடியே 50 லட்சம் லிட்டர் பால் வீட்டு உபயோகம் மற்றும் வியாபாரத்திற்காக வினியோகம் செய்யப்படுகிறது.
இதில், 24 லட்சம் லிட்டர் பால் ஆவின் மூலமாகவும், ஒரு கோடியே 26 லட்சம் லிட்டர் தனியார் நிறுவனங்கள் மூலமாகவும் விற்பனை செய்யப் படுகிறது.
இந்நிலையில், நேற்று முதல் தனியார் நிறுவனங்கள் பால் விலையை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தியுள்ளது. இதனால், டீ, காபி போன்றவற்றின் விலையை உயர்த்த டீக்கடைக்காரர்கள் திட்டமிட்டுள்ளனராம்.
புதிய விலை...
புதிய விலையின் படி, தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் கொழுப்பு செரியூட்டிய பால் லிட்டருக்கு ரூ.45, சமன்படுத்திய பால் ரூ. 44, நிலைப்படுத்திய பால் ரூ. 40, கொழுப்பு நீக்கிய பால் ரூ.36 என்ற விலைக்கு விற்கப்படுகிறது.
தனியார் பால் நிறுவனங்கள்...
பெரும்பாலான டீக்கடைகள் மற்றும் ஹோட்டல்கள் தனியார் நிறுவனங்களிடமிருந்து பால் வாங்கியே டீ, காபி தயாரித்து விற்பனை செய்து வருகின்றன. இந்நிலையில், தனியார் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் டீ, காபி ஆகியவற்றின் விலையை உயர்த்த அவை திட்டமிட்டுள்ளன.
விலையுயர்வு...
இதனால், டீ விலை ரூ.7-ல் இருந்து ரூ.8 ஆகவும், காபி ரூ.8-ல் இருந்து ரூ.9 ஆகவும் உயர்த்த வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. விரைவில் இந்த விலை உயர்வு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
தவிர்க்க இயலாதது...
ஏற்கனவே, காபி தூள், டீ தூள் விலை உயர்ந்து விட்ட நிலையில், தற்போது பால் விலையும் உயர்த்தப்பட்டிருப்பதால் இந்த விலை உயர்வு தவிர்க்க இயலாதது என டீக்கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications